இன்று உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினை பற்றி உலகமெங்கும் பேச வைத்தவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். ஏனெனில் ஒரு சாரர் கிரிப்டோகரன்சி முதலீடு நல்ல விஷயம் என்று கூறினாலும், இதனை ஒரு தரப்பு இன்று வரையிலும் ஏற்றுக் கொள்ளாமல் தான் உள்ளது. இந்த நிலையிலும் நம்பிக்கையோடு இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி ரூபாயினை முதலீடு செய்தவர்.
அதோடு இனி தனது நிறுவனங்களில் பொருட்கள், சேவைகள் அனைத்தும் பிட்காயின் செலுத்தியும் பெறலாம் என அறிவித்திருந்தார். எலானின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பிறகு தான், பிட்காயின் மதிப்பு தாறுமாறாக ஏற்றம் கண்டது.
பிட்காயின் முதலீடு என்பது தற்போது பரவலாக உலகளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பிட்காயின் மீது ஈர்ப்பு
உலகளவில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஆண்டில், உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பங்கு சந்தைகள் தரை தட்டின. ஆனால் மறுபுறம் சத்தமேயில்லாமல் பிட்காயின் மதிப்பு மட்டும் ஏற்றம் கண்டு கொண்டிருந்தது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பிட்காயின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.
நம்பிக்கையை கொடுத்த டெஸ்லா
இந்த நிலையில் தான் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் இன்னும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தன. பல்வேறு நாடுகளில் இந்த டிஜிட்டல் கரன்சியை தடை செய்துள்ள போதிலும், இதன் வளர்ச்சி விகிதம் பல முதலீட்டாளர்களையும் ஈர்த்தது. இந்த நிலையில் தான் மின்சார கார் தயாரிப்பாளராக டெஸ்லா தனது வாகனங்களை வாங்குவதற்காக, வாடிக்கையாளர்கள் பிட்காயினை கொடுக்கலாம். அதனை டெஸ்லா ஏற்றுக் கொள்ளும் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பிட்காயினை கொடுத்து டெஸ்லா கார் வாங்கலாம்
ஆக நீங்கள் தற்போது டெஸ்லா கார் வாங்க வேண்டுமெனில் பிட்காயின் இருந்தாலே கூட போதும். இது முதல் வாகன உற்பத்தியாளராக டெஸ்லா பிட்காயினை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் இன்னும் பல சர்வதேச முதலீட்டாளார்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
இன்றைய பிட்காயின் நிலவரம்
இதற்கிடையில் இன்று பிட்காயின் மதிப்பானது 56,120 டாலர்களாக உள்ளது. இதனை நிபுணர்கள் 1,00,000 லட்சம் டாலர்களை தொடலாம் என கணித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், தொடர்ந்து பிட்காயினில் தங்களது முதலீடுகளை செய்ய மேலும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.