உலகளவில் டெஸ்லா காரின் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் சீனாவில் இந்நிறுவனத்திற்கு எதிராகப் புதிய தடை உத்தரவைச் சீன ராணுவம் விதித்துள்ளது. சீன ராணுவத்தின் இந்த உத்தரவு டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்-ஐ மட்டும் அல்லாமல் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில் சீன ராணுவத்தின் உத்தரவைக் கண்டு கோபம் அடைந்த எலான் மஸ்க், அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா கார் கேமரா
டெஸ்லா கார்களின் பிற கார்களில் இல்லாத அளவிற்கு அதிகளவிலான கேமரா மற்றும் சென்சார்கள் இருக்கும் காரணத்தால் ராணுவ பகுதிகள் மற்றும் ராணுவ குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் டெஸ்லா கார் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சீன ராணுவம்
சீன ராணுவம் டெஸ்லா கார்களில் இருக்கும் கேமராக்களில் பாதுகாப்புக் குறித்த தரவுகள் திரட்ட கூடும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டெஸ்லாவுக்குத் தடை
இதேபோல் சீன ராணுவம் டெஸ்லா கார் உரிமையாளர்களை ராணுவ தளங்கள் மற்றும் ராணுவ குடியிருப்பில் பயன்படுத்த வேண்டாம் என்றும் கார்களை ராணுவ பகுதிகளுக்கு வெளியிலேயே நிறுத்த வேண்டும் என உத்தரவையும் வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க் அதிரடி பதில்
இந்நிலையில் முன்னணி சீன அமைப்புக்கு வீடியோ கான்பிரென்சிங் மூலம் பேசிய எலான் மஸ்க், டெஸ்லா கார் மூலம் எவ்விதமான உளவு வேலையையும் பார்ப்பது இல்லை. சீனாவிலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலாவது டெஸ்லா கார் உளவு பார்க்கப்பட்டால் நிறுவனத்தையே மூடிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
சீனாவில் 30 சதவீத வர்த்தகம்
உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில் டெஸ்லா நிறுவனம் இதுவரை சுமார் 1,47,445 கார்களை விற்பனை செய்துள்ளது. டெஸ்லாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 30 சதவீத வர்த்தகத்தைச் சீனாவில் வைத்துள்ளது.
வர்த்தகப் போட்டி
ஆனால் சீனாவில் தற்போது நியோ முதல் கீலி நிறுவனம் வரையில் பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இதனால் டெஸ்லா 2021ல் மிகப்பெரிய வர்த்தகப் போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.