EMI அவகாசத்தினை இரண்டு ஆண்டுகள் வரையிலும் கூட நீட்டிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ தகவல் தெரிவித்துள்ளன.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், மக்கள் பலர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
தங்களது அடிப்படை தேவைக்களுக்கே கூட கஷ்டப்பட்டு வரும் மக்கள், வங்கிகளில் செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்கள் தவிப்பு
கடந்த மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் படிப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் வேலைகளை இழந்து வரும் மக்கள், தங்களது தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக, இப்படி ஏராளாமானோர் பல காரணங்களுக்காக தங்களது வங்கித் தவணையினை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
2 வருடம் வரை அவகாசம் வழங்க முடியும்
இதற்கிடையில் ஆகஸ்ட் மாத இறுதியுடன் தடை காலம் முடிவடைந்துள்ள நிலையில், இனியும் இந்த இஎம்ஐ கால அவகாசம் நீட்டிக்கப்படுமா வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் பரவலான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இந்த நிலையில் இவர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உச்ச நீதிமன்றத்தில், வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த 2 வருடம் வரை அவகாசம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் பொருளாதார சீர்குலைவுக்கு மத்தியில் அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்டு வரும் மக்கள், தற்போது வங்கிகளுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அது மட்டும் அல்ல வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நிலையும் இருந்து வருகிறது. ஆகஸ்ட் முடிந்தாயிற்று, இன்று செப்டம்பர் 1 என்ற நிலையில், வங்கிகள் வசூல் வேட்டையில் குதித்துள்ளன.
நாளை முக்கிய முடிவு
இதற்கிடையில் இதனை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2 வருடம் வரை கால அவகாசம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளன. மேலும் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து நாளை உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.