டெல்லி: கொரோனா லாக்டவுன் காரணமாக வங்கிகள் தவணை தொகை செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கின. ஆனால் செலுத்த வேண்டிய தொகையை வட்டிக்கு வட்டி என செலுத்த வேண்டும் என வாதாடின.
ஆனால் EMI தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கவும், வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் கோரிய 2 பொது நல மனுக்கள் மீதான விசாரணையில், அக்டோபர் 5ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மேலும் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு, இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இது குறித்தான அறிக்கையை மனுதாரருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கொரோனாவால் பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பலர் தங்களது வேலையினை இழந்தும், வருவாயினை இழந்தும் தவித்து வந்தனர். இந்த காரணத்தினால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
வட்டி தள்ளுபடி இல்லை
தங்களது அடிப்படை தேவைக்கே கஷ்டப்படும் நிலையில், இஎம்ஐ-யினை எப்படி செலுத்துவார்கள் என்ற பலதரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதன் காரணமாக முதற்கட்டமாக ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு வங்கிகளுக்கு இஎம்ஐ கால அவகாசத்தினை கொடுக்கலாம் என கூறியது. ஆனால் அதன் பின்னர் அதனை மீண்டும் 3 மாதம் அதிகரித்தது. ஆக மொத்தம் 6 மாதம் இந்த கடன் தவணையை செலுத்த அவகாசம் கிடைத்திருந்தாலும், வட்டி தள்ளுபடி இல்லை என்றும் வங்கிகள் கூறின.
வட்டி தள்ளுபடி வேண்டும்
ஆனால் இது பலதரப்பிலும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வந்தன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகின்றது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை வாராக்கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள் அனைத்தையும், மறு உத்தரவு வரும் வரை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசின் குழு தீவிர பரிசீலனை
மேலும் ஆகஸ்ட் 31 வரை வாராக்கடனாக அறிவிக்கப்படாத வங்கிக் கணக்குகள், அனைத்தினையும் வாராக்கடனாக அறிவிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மத்திய அரசு என்ன முடிவினை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேட்டனர். அரசு தரப்பில் மத்திய அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையில் மத்திய அரசின் முடிவுகளை அக்டோபர் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். முடிந்தவரை விரைவாக பிரமாணப் பத்திர நகல்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கும் விரைவாக அதன் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும். அதோடு அக்டோபர் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கிறோம். மத்திய அரசின் முடிவுகள் பதிவு செய்யப்பட்டு, பிரமாணப் பத்திர தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.