கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி ஊழியர்களுக்கு சாதகமான செய்திகளாக வந்து கொண்டிருந்தன. கொரோனா காலத்தில் கூட சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு, ஒராண்டில் இருமுறை சம்பள அதிகரிப்பு என பல ஐடி நிறுவனங்கள் அறிவித்தன.
அதோடு தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தல் விகிதமும் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது.
மேலும் இன்னும் வரவிருக்கும் காலாண்டுகளிலும் இந்த பணியமர்த்தல் விகிதமானது உச்சம் தொடும் என நிபுணர்கள் கூறி வந்தனர். ஏனெனில் டிஜிட்டல் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகம் உள்ளது.
தலைவலியாக மாறும் attrition விகிதம்
பொதுவாக நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் அதன் ஊழியர்களின் வளர்ச்சியினை பொறுத்து இருக்கும். ஆனால் தற்போது தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது attrition விகிதம். இந்த attrition விகிதம் அதிகரிப்பதால், நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன
Attrition என்றால் என்ன?
முதலில் attrition என்றால் என்ன? ஏன் இது நிறுவனங்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது என்பதை பார்க்கலாம். ஒரு நிறுவனத்தில் குறிப்பட்ட காலத்தில் உதாரணமாக ஒரு காலாண்டில் அதிகமான ஊழியர்கள் வெளியேறுவது தான் அட்ரிஷன் விகிதம். இதில் 10 வருடம் அனுபவம் வாய்ந்தவர்களும் கூட இருக்கலாம். இணைந்து 1 மாதம், 1 வருடம் ஆன ஊழியர்களும் இருக்கலாம். ஆக குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கைக்கும் வெளியேறிய ஊழியர்கள் எண்ணிக்கைக்கும் மத்தியில் இருக்கும் சதவீதம் தான் அட்ரிஷன் விகிதம்.. இதனால் நிறுவனங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் சரியான நேரத்தில் தங்களது ஒப்பந்தங்களை முடிக்க முடியாமல் போகலாம்.
அதிகரிக்கும் செலவுகள்
மேலும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அதிக சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. தற்போது நிறுவனங்களில் தேவை அதிகம் இருப்பதால் சம்பளத்தினை பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ஐடி நிறுவனங்களை பொறுத்தவரையில் சரியான நேரத்திற்கு புதிய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால், அந்த நேரத்தில் அதிக சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை என பணியில் புதியதாக ஆட்களை அதிக சம்பளத்தில் பணியில் அமர்த்துகின்றன. இதனால் நிறுவனங்களுக்கு செலவுகள் தான் அதிகரிக்கின்றன.
வேலையை விட்டு செல்பவர்கள் அதிகம்
தற்போது ஐடி துறையில் நிலவி வரும் தேவை காரணமாக, ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தலை விட, வேலையை விட்டு செல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்கிறது ஒர் கணிப்பு. ஆக இந்த ஏற்றமானது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கவலையளிக்கும் ஒரு சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
வலுவான வளர்ச்சி
ஏனெனில் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள நிறுவனங்கள் அதிக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. எனினும் அடுத்து 3- 4 வருடங்களுக்கு ஐடி துறையில் வளர்ச்சி விகிதம் என்பது வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருவாய் விகிதமும் அதிகரிக்கும் என்பதால், செலவினங்களை சமாளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனங்கள் வந்தாலும், மீடியம் டெர்மில் சற்று சவால்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவை
தற்போது உலகெங்கிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கிளவுட் சேவைகள் என்பது அதிக தேவையுள்ளதாக மாறி வருகின்றது. இதனால் ஐடி நிறுவனங்களின் தேவையானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி கண்ணோட்டமானது அடுத்த சில ஆண்டுகளுக்கு வலுவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நிறுவனங்களுக்கு பெரும் சவாலான விஷயமாகவும் இருந்து வருகின்றது.
இது தான் காரணமா?
சில முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள கடந்த ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சம்பள உயர்வு, போனஸ் என பல சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளன. சமீபத்திய செய்தியொன்றில் திறனுள்ள ஐடி ஊழியர்களுக்கு என்றுமே தேவை அதிகம் உள்ளது. ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையே நிலவி வருகின்றது. ஆக ஊழியர்கள் தங்களது டிஜிட்டல் திறனை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும் என்கிறது ஒரு அறிக்கை.
பல ஆஃபர்கள்
திறனுள்ள ஊழியர்களுக்கு நிறுவனங்கள் பெரியளவில் தொகையை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ள நினைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன் மூலம் எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நிறுவனங்களுக்கு தலைவலி தான்
நிச்சயம் இது ஐடி நிறுவனங்களுக்கு பெரிய சவாலான விஷயமே. இந்த சவாலை எதிர்கொள்ள நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து பணியமர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன.
இது ஒரு புறம் ஊழியர்களுக்கு நல்ல விஷயம். எனினும் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறுகின்றன.
அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயம்
மொத்தத்தில் ஐடி நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்து வருவது ஒரு புறம் எனில், மறுபுறம் ஊழியர்கள் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை வேண்டாம் என தூக்கி போடுவதும் வருவதும் அதிகரித்து வருகின்றது. ஏனெனில் ஐடி துறையில் அடுத்த சில வருடங்களுக்கு வேலைவாய்ப்புக்குப் குறைவிருக்காது என்ற நிலையில், ஐடி நிறுவனங்கள் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள அதிகம் சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. அதோடு புதிதாகப் பணியில் சேர்வோருக்கு அதிகளவிலான சம்பளத்தை அளித்து வருகிறது.