சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலும் செல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனம் சியோமி. இந்த நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை சனிக்கிழமை முடக்கியது.
அமலாக்கத்துறை
சியோமி சொத்துக்கள் முடக்கம் குறித்து விளக்கம் அளித்த அமலாக்கத்துறை, "சியோமி நிறுவனம் சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அண்மையில் பெரும் தொகையை அனுப்பியது. மீதம் உள்ள பணத்தை இந்திய வர்த்தகத்துக்காக எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் வைத்து இருந்தது.
ராயல்டி
இந்நிலையில் அதிலிருந்து கூடுதல் தொகையை ராயல்டி என்ற பெயரில் சியோமி நிறுவனத்துக்கு சொந்தமாக வேறு நாடுகள் உள்ள கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக சியோமி நிறுவனம் இந்த பணப்பரிமாற்றத்தைச் செய்துள்ளது எனவும், 5,551 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக" அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சியோமி
சியோமி நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து இங்கு பல்வேறு நிறுவனங்கள் உதவியுடன் செல்போன்களை தயாரித்து வருகிறது. அதற்காக அந்த நிறுவனங்களுக்கு மென்பொருள் உதவி, கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த வேண்டும். ஆனால் அதை செய்யாமல் சியோமி நிறுவனம் வெளிநாட்டில் உள்ள தங்களது நிறுவனத்தின் வேறு கிளைகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளது.
அந்நியச் செலாவணி
சியோமி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விதிமீறல் குற்றமாகும். அதுமட்டுமல்லாமல் சியோமி நிறுவனம் தவறான தகவல்களை வங்கிகளுக்கு அளித்துள்ளதாகவும் அதனால் தான் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
எல்லை பிரச்சனை
கடந்த 2 ஆண்டுகளாக சீனா எல்லை பிரச்சனை தொடங்கியதிலிருந்து, இந்தியாவில் சீன நிறுவனங்கள் அனைத்தையும் உன்னிப்பாக அமலாக்கத்துறை கண்காணித்து வருகிறது.
வருமான வரித்துறை
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை சியோமி, ஓப்போ உள்ளிட்ட சீன நிறுவனங்களில் சோதனையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் சாதனங்கள்
சியோமி நிறுவனம் இந்தியால் செல்போன்கள் மட்டுமல்லாமல் டிவி, லேப்டாப், ஸ்மார்ட் எலக்ட்ரிக் சாதாங்கள் உள்ளிட்ட பொருட்களையும் விற்பானை செய்து வருகிறது.
ரெட்மீ
சியோமி நிறுவனம் எம்ஐ, ரெட்மி மற்றும் போக்கோ என 3 பெயர்களில் ஸ்மார்ட்போன், டிவிகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
சீன செயலிகள்
இந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை விதித்த போது டிக்டா, ஹெலோ, ஷேர்-இட் உடன் சேர்த்து எம்ஐ உலாவி, எம்ஐ வீடியோ, எம்ஐ வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மீதும் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.