சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நேரத்தில் இந்தியாவில் உள்ள 44 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன நிறுவனமான விவோ பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த சோதனை நடப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
விவோ மொபைல் தயாரிப்பு நிறுவனம்
இந்தியாவில் புகழ் பெற்றிருக்கும் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று விவோ என்பதும் இந்த நிறுவனத்தின் மொபைல் மாடல்கள் இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை ரெய்டு
இந்த நிலையில் பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அந்நிறுவனம் தொடர்பான பிற நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
44 இடங்களில் ரெய்டு
ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் 44 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு
நூற்றுக்கணக்கான கோடி வரி ஏய்ப்பு செய்ததாக உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விதிமீறல்
மேலாண்மை சட்டம் மற்றும் அரசின் விதிமுறைகளை மீறியதால் இந்தியா முழுவதும் 44 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் குறிப்பாக பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
விவோ கம்யூனிகேஷன்
விவோ நிறுவனத்தின் பூர்வீகத்தை கண்டறியும் பணியில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே கடந்த மே மாதம் விவோ கம்யூனிகேஷன் நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்ததாக விசாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னொரு சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான எம்.ஐ. மீதும் அமலாக்கப்பிரிவு கண்காணிப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications