நல்ல கார்ப்பரேட் வேலை, வருடத்திற்கு ரூ.5 லட்சம் சம்பளம்.. இப்படி ஒரு வேலை கிடைத்து விடாதா? என்பது தான் இன்றைய இளைய தலைமுறையின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு வேலை கிடைத்தும் அதை உதறி தள்ளிவிட்டு தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் ஒரு பெண்மணி. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தத் தொழிலில் கார்பரேட் வேலையை விட அதிகம் சம்பாதித்தும் வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொறியியல் படிப்பை முடித்தவர் மயூரி நிதின் காலே. இவருக்கு படிப்பு முடிந்த பிறகு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் சம்பளத்தில் கார்ப்பரேட் வேலை கிடைத்தது. ஆனால் அப்போது அவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தையும் இருந்தது. பணியில் சேர்வதற்கு அவர் தான் வசிக்கும் இடத்தை தாண்டி புனேவிற்கு குடிபெயர வேண்டும்.

அப்படியே அங்கு சென்று வந்தாலும் தன் குழந்தையை விட்டு நீண்ட நேரம் பிரிந்து பணியாற்ற வேண்டும். மயூரிக்கு தன் குழந்தையுடன் நேரத்தை செலவிடவே ஆசை. இதனால் கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊரான நாசிக்கில் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தார்.
வழக்கம் போல ஒரு வேலையை வேண்டாம் என்று சொன்னால் உறவினர்கள் என்ன சொல்வார்களோ? அதே தான் மயூரிக்கும் நடந்தது. ஏன் இப்படி ஒரு வாய்ப்பை தவறவிடுகிறாய்? என்று பலரும் மயூரியைத் திட்டி தீர்த்தனர். ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் தன் மனதிற்கு பிடித்த வேலையை செய்ய நினைத்தார்.
தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் மயூரிக்கு இருந்தாலும் அதற்கான அனுபவமோ அல்லது முதலீடோ அவரிடம் இல்லை. இதனால் நாசிக்கில் ஒரு சிறிய ஜூஸ் கடையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஜூஸ்களை வழங்கி வந்தார்.
அவர் வழங்கும் ஜூஸ் வெரைட்டி மக்களுக்கு பிடித்து போகவே.. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். அதற்காக மயூரி பெரிதாக ஒன்றும் விளம்பரம் செய்யவில்லை. மக்களின் வாய்வழி விளம்பரம் தான் அவருடைய கடையை பிரபலமடையச் செய்தது. ஒரு சிறு கடையில் தொடங்கிய அவருடைய பிசினஸ் வெகு சீக்கிரத்தில் பெரிய தொழிலாக மாறியது. தற்போது மயூரி தனது ஜூஸ் கடையின் மூலம் மாதத்திற்கு ரூ.80,000 வரை லாபம் பார்த்து வருகிறார். ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் டர்ன் ஓவர் கிடைக்கிறது.
ஆரம்பத்தில் பிசினஸ் செய்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுமோ? அந்த பிரச்சனை எல்லாம் மயூரிக்கும் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டு அவர் மனம் தளரவில்லை. தொடர்ந்து ஒரு சிறந்த தாயாகவும் இருந்து, பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார். இறுதியில் அவருடைய விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது.
கார்ப்பரேட் வேலை மட்டுமே வெற்றிக்கான வழி கிடையாது. அதுவும் இன்றைய ஐடி நிறுவனங்கள் தயங்கி தயங்கி ஊழியர்களை பணியமறுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் சொந்தமாக தொழில் தொடங்கி இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார். அந்தந்த பகுதியில் என்ன தேவை இருக்கிறது? என்பதை தெரிந்து கொண்டு தொழில் தொடங்கி.. ரிஸ்க் இருந்தாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மயூரியை போலவே சாதிக்கலாம் என்பதே நிதர்சன உண்மை.


Click it and Unblock the Notifications
