தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF பணத்தை எடுப்பதற்கான புதிய நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், பணி ஓய்வு பெறும் நபர்கள் என கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாரர்கள் இதனை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மக்களவையில் பிஎஃப் பணத்தை எடுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, பிஎஃப்-இன் புதிய விதிகளின் முக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார். அதில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து விலகிய பிறகு, தங்கள் முழு பிஎஃப் தொகையையும் எடுப்பதற்கு இனி 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். எனவே நீங்கள் வேலைவிட்டு நின்றுவிட்டீர்கள், அல்லது பணி ஓய்வு பெறப்போகிறீர்கள் என்றால் முழு பிஎஃப் தொகையையும் எடுக்க 12 மாதம் அதாவது ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும்.

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் (Employees' Pension Scheme - EPS) உள்ள பணத்தை எடுப்பதற்கு 36 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புதிய காத்திருப்பு காலம் அமலில் இருந்தாலும், அவசர தேவைகளுக்கு ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்றும் அதற்கு ஏதுவாக விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
இதன்படி தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தில் பெரும் பகுதியை அவசர தேவைகளுக்காக எடுத்து கொள்ளலாம். தங்கள் கணக்கில் உள்ள தொகையில் 75% வரை, எந்தக் காரணமும் குறிப்பிடாமலேயே, ஒரு ஆண்டில் இரண்டு முறை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வீடு கட்டுவது, மருத்துவ அவசர செலவு, கல்வி மற்றும் வேலையின்மை தொடர்பான செலவுகளுக்கு தேவையான நிதியை ஊழியர்கள் முன்னுரிமையுடன் பெற முடியும். அதாவது இந்த காரணங்களுக்காக விண்ணப்பம் செய்தால் விரைவாக பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த புதிய மாற்றங்கள் மத்திய அறங்காவலர் குழுவின் 238-வது கூட்டத்தில், தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் முன்னிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட பின்னரே அறிவிக்கப்பட்டுள்ளன என அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் டிஜிட்டல் முறை மூலம் பிஎஃப் பணத்தை விரைவாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அரசு கூறியுள்ளது. இதற்காக ஈபிஎஃப்ஓ 3.0 திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இது நடைமுறைகு வந்துவிட்டால் பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் நொடிப்பொழுதில் எடுத்து பயன்படுத்த முடியும்.
பிஎஃப் கணக்கிலிருந்து முழுமையாக பணத்தை எடுப்பதற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால் 75% வரையிலான பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிஎஃப் பணமே ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்ய தான் பிடித்தம் செய்யப்படுகிறது, எனவே ஊழியர்களின் நீண்டகால ஓய்வூதிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

