உலகம் எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இதில் EPFO அமைப்பும் இணைந்திருக்கிறது. இது கண்டிப்பாக அதன் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஒரு காலத்தில் PF பணத்தை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. EPFO அலுவலகத்திற்கு ஏறி இறங்கி, படிவங்களை எல்லாம் நிரப்பி சமர்ப்பித்தால் மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.

ஆனால் தற்போது EPFO அமைப்பு ஒவ்வொன்றாக டிஜிட்டல் செயல்முறையை அமலுக்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளது. 2026-ஆம் ஆண்டு முடிவதற்குள் அனைத்து செயல்பாட்டையும் டிஜிட்டலுக்கு மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது?: EPFO 3.0 திட்டத்தின் கீழ் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்பட உள்ளது. பிஎப் தொடர்பான சேவைகளுக்கு இனி சிரமப்படத் தேவையில்லை. நீங்கள் பணம் பெற விண்ணப்பித்த சில நாட்களிலேயே பணம் தானாக உங்கள் கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும். அதேபோல உங்களுக்கு விருப்பமான வங்கியை தேர்ந்தெடுத்தும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஏடிஎம் வசதி: EPFO 3.0 திட்டத்தின் ஆகச்சிறந்த அம்சம் இதுதான். இனி உங்கள் பிஎஃப் பணத்தை ஏடிஎம் கார்டு மூலமாக அல்லது யுபிஐ மூலமாக எடுக்க முடியும். ஆனால் இதற்கு வரம்பு உண்டு. தற்போதைய தகவல் படி உங்களுடைய மொத்த பேலன்ஸில் 50 சதவீதம் வரை ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஏடிஎம் வாயிலாக PF பணம் எடுப்பது எப்படி?: வெளியான அறிக்கையின் படி EPFO அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏடிஎம் கார்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் நேரடியாக ஏடிஎம் மையங்களுக்கு சென்று PF பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகம் செய்யவுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த வசதி கிடைக்கும்?: உங்களிடம் அதற்கு UAN நம்பர் இருக்க வேண்டும். உங்கள் பிஃஎப் கணக்குடன் உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட், மற்றும் IFSC கோட் ஆகியவை சரியாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருக்கும் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதன்படி EPFO அமைப்பு 2026-ஆம் நிதியாண்டில் மட்டும் 88.31 கோடி கிளைம்களைத் தீர்த்து வைத்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்றே கூறப்படுகிறது. பிஎஃப் கிளைம் கோரிக்கையில் பகுதியளவு பணம் எடுப்பது, முழு PF பணத்தையும் எடுப்பது என அனைத்தும் அடங்கும்.
அதே போல சுமார் 71.11 சதவீதம் விண்ணப்பங்கள் வெறும் மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன. செக் லீப் பதிவேற்றம் செய்யாமலேயே 6.68 கோடி பேரின் கணக்கிற்கு பிஎஃப் பணம் மாற்றப்பட்டுள்ளது. ஆட்டோ ட்ரான்ஸ்பர் வசதியும் 70.55 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும்?: இந்த வசதி மே மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை அப்படி அமலுக்கு வந்தால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு EPFO அமைப்பின் சார்பில் வெளியிடப்படும்.
ஊழியர்களின் பணத்தை தாங்களே கையாளும் விதமாக EPFO எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகவே பார்க்கப்படுகிறது. இனி அவசரத் தேவைக்கு பணிபுரியும் ஊழியர்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை. தங்களுடைய பிஎப் பணத்தையே எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications