மாதச் சம்பளக்காரங்களுக்கு கைக்கு வரும் சம்பளம் 5-ஆம் தேதிக்கு மேல் எங்கு செல்கிறது என்பதே தெரியாது. இதனால் சேமிப்பதற்கு ஒன்றுமே மிச்சமிருக்காது. இந்தக் காரணத்தினாலோ என்னவோ நிறுவனங்களே பிடித்தம் செய்கின்ற பிஎஃப் பணம் தான் இது போன்ற குடும்பங்களுக்கு முதன்மை சேமிப்பாக இருக்கிறது. சம்பளம் கைக்கு வருவதற்கு முன்னரே பிடித்தம் செய்யப்படுவதால் பிரச்சனை இல்லாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். எனவே ஈபிஎஃப் கணக்கை சரிவர நிர்வகிப்பது மிக மிக முக்கியம். இதில் ஏற்படும் சிறு தவறு கூட உங்களுடைய சேமிப்பையும், ஓய்வூதியத்தையும் பாதிக்கலாம்.
வேலையில் சேர்ந்த தேதி: டேட் ஆஃப் ஜாயினிங் (DOJ) என்று சொல்லப்படும் வேலையில் சேர்ந்த தேதியை ஈபிஎஃப் கணக்கில் சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஜனவரி 1-ஆம் தேதி பணியில் சேர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த தேதியை உங்கள் நிறுவனம் மார்ச் 1 என்று தவறுதலாக பதிவு செய்துவிட்டது. அப்படியானால் நீங்கள் 2 மாதங்கள் வேலை செய்திருந்தாலும் வேலை செய்யாததாகவே கருத்தில் கொள்ளப்படும்.

நீங்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் செய்த வேலைக்கு பிஎஃப் தொகை பிடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அரசு பதிவுகளில் நீங்கள் மார்ச் மாதம் வேலை செய்ததாகவே இருக்கும். இப்படி இருந்தால் 2 மாத PF தொகைக்கு வட்டி கிடைக்காது. அதோடு நீங்கள் 1 வருடம் வேலை செய்திருந்தாலும் ஈபிஎஃப் பதிவுகளில் 10 மாதங்கள் வேலை செய்ததாகவே காண்பிக்கப்படும். இதனால் உங்கள் கணக்கிற்கு கூட்டு வட்டி மூலம் கிடைக்க வேண்டிய வட்டி குறைந்து விடும்.
வேலையிலிருந்து விலகிய தேதி: டேட் ஆஃப் எக்ஸிட் என்று சொல்லப்படுகிற வேலையில் இருந்து விலகிய தேதியையும் சரியாக ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு வேறு நிறுவனங்களுக்கு மாறும்போது ஈபிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு, பணம் எடுப்பதற்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க இதை செய்வது அவசியம்.
உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ? அதைப் பொறுத்துதான் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தேதி தவறாக இருப்பதால் வட்டி வராமல் போய்விடாது. இருந்தாலும் அடுத்தடுத்த முறை வட்டி வரவு வைக்கப்படும் போது தாமதம் ஏற்படலாம்.
EPS ஓய்வூதியம்: ஈபிஎஃப் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. ஆனால் டேட் ஆஃப் ஜாயினிங் மற்றும் டேட் ஆஃப் எக்ஸிட் தேதி தவறாக இருந்தால் உங்களுடைய சேவைக் காலம் குறைவாக இருக்கும். 10 ஆண்டுகளை நெருங்கும் நபர்களுக்கு சிறு வித்தியாசம் ஓய்வூதியம் வராமல் தாமதமாக்கலாம்.
ஈபிஎப் டிரான்ஸ்ஃபர்: ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது எக்ஸிட் தேதியை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் ஆன்லைன் மூலமாக PF தொகையை புதிய நிறுவனத்திற்கு மாற்றலாம். பழைய நிறுவனம் இந்தத் தேதியை சரியாக பதிவிடாமல் விட்டு விட்டால் பிஎஃப் டிரான்ஸ்பர் செய்வது தாமதமாகும்.
பணி அனுபவத்தில் ஏற்படும் குழப்பங்கள்: தவறான தேதி இருந்தால் நீங்கள் தொடர்ந்து பணிபுரிந்தாலும் கரியர் கேப் இருப்பவராக கணக்கிடப்படும் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்வது போல் முரண்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மொத்த ஓய்வூதியமும் பாதிக்கப்படுவதோடு 10 ஆண்டு பணி அனுபவத்தில் பிரச்சனை ஏற்படும்.
இது போன்ற தவறுகள் எப்போது ஏற்படும்?: வேலையில் சேரும்போதோ அல்லது வேலையில் இருந்து விலகும் போதோ.. நிறுவனங்கள் தெரியாமல் உங்கள் டேட் ஆஃப் ஜாயினிங் மற்றும் டேட் ஆஃப் எக்ஸிட் தேதியை தவறாக பதிவிட வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் EPFO கணக்கை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஒரு சிலர் அப்படியே விட்டு விடுவதால் பல ஆண்டுகள் கழித்து அந்தந்த உறுப்பினர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
தவறான தேதியை எப்படி சரி செய்வது?: ஜனவரி 2025-ஆம் ஆண்டு முதல் ஆதார் இணைக்கப்பட்ட UAN கணக்கு வைத்திருந்தால் எந்தவித ஆவணமும் இன்றி நீங்களே பணியில் இருந்து விலகிய தேதியை இணையதளத்தில் அப்டேட் செய்ய முடியும். மிகவும் பழைய கணக்காக இருக்கும் பட்சத்தில் அதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவைப்படலாம்.
பிஎஃப் பணத்தை பெறுவதற்கு முன்பு செய்ய வேண்டியவை?: வேலையில் இருந்து விலகிய 2 மாதங்களுக்கு பிறகு DOE தேதியை நீங்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். வேலை மாறியவுடன் உங்கள் ஈபிஎஃப் விபரங்களையும் சரிபார்த்து வைத்துக் கொள்வது பிஎஃப் கிளைம் கோரிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உதவும்.


Click it and Unblock the Notifications
