ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.50% ஆக குறைத்துள்ளது.
Employees' Provident Fund Organisation எனப்படும் பணியாளர் அமைப்பு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், நடப்பு நிதியாண்டுக்கு 8.50% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 - 19ம் நிதியாண்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது இது 0.15% குறைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பாதிப்பு
இந்த நடவடிக்கையால் 60 மில்லியன் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்று. இதில் அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர ஊதியத்திலிருந்து, அவர் பணியாற்றும் நிறுவனம் சார்பிலும், பணியாளர் சார்பிலும் பங்களிப்பு செய்வதாகும்.
பிஎஃப் தொகைக்கு வட்டி
இந்தப்பங்களிப்பு தொகையை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகைக்கு அரசு வட்டியும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இதற்கான வட்டி விகிதம் தான் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது சம்பளதாரர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
குறைந்து வருகிறது
இந்த விகிதமானாது ஆண்டுக்கு ஆண்டு சற்று குறைந்து வருவது கவனிக்கதக்க விஷயம்.
2012 - 2013ல் வட்டி விகிதம் - 8.5%
2013 - 2014ல் வட்டி விகிதம் - 8.75%
2014 - 2015ல் வட்டி விகிதம் - 8.75%
2015 - 2016ல் வட்டி விகிதம் - 8.8%
2016 - 2017ல் வட்டி விகிதம் - 8.65%
2017 - 2018ல் வட்டி விகிதம் - 8.55%
2018 - 2019ல் வட்டி விகிதம் - 8.65%
2019 - 2020ல் வட்டி விகிதம் - 8.5%
வட்டி குறைப்பு
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற அரசாங்க திட்டத்தால் நடத்தப்படும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வருவது கவனிக்க தக்கது.
வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பல்வேறு இடங்களில் அரசு மூலம் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் மேற்கொண்ட முதலீடுகள், அரசாங்க பத்திரங்கள் மீது எதிர்பார்த்த வருமானம் கணிசமான அளவு குறைந்திருப்பதால், இந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.