இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தங்களது ஓய்வு காலம் பற்றிச் சிந்தித்து முதலீடுகளைச் செய்வதில்லை. இருந்தாலும் அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பிஎப் கணக்குகள் மூலம் சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் அதையும் சரியாக புரிந்துகொள்ளாத பலர் இடையில் பல்வேறு காரணங்களுக்காக அதை எடுத்து செலவு செய்துவிடுகிறார்கள். பலர் அந்த விவரங்களை யாரிடம் வெண்டுமானாலும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இதனால் கடினமாக சம்பாதித்த பணத்தை மோசடி செய்பவர்கள் திருட பல வழிகள் உள்ளன. வங்கி கணக்கு விவரங்கள் போன்று, உங்கள் பிஎப் கணக்கின் விவரங்களைக் கேட்கும் ஆன்லைன் மோசடிகள் முதல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்வது வரை அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆன்லைன் மோசடி அச்சுறுத்தல் உள்ளது.
எனவே சமீபத்தில் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு டிவிட்டர் பதிவு மூலம் வெளியிட்டது. அதை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பகிரக்கூடாத விவரங்கள்
பான் எண், யுஏஎன் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஓடிபி உள்ளிட்ட விவரங்களை போன் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் யாரிடமும் கொடுக்கக் கூடாது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமூக ஊடகங்கள் அல்லது போன் மூலம் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களிடம் இந்த விவரங்களைக் கேட்பதில்லை. இந்த விவரங்களைக் கேட்டு உங்களுக்கு அழைப்பு வந்தால், அது மோசடி அழைப்பு என தெரிவித்துள்ளது.
டெபாசிட்
வாட்ஸ்அப் மூலம் பிஎப் கணக்கில் டெபாசிட் செய்ய பணம் அனுப்புமாறு மோசடிகளை நடைபெறுவதாகப் புகார்கள் வருகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒருபோதும் ஊழியர்களுடன் நேரடியாகப் பணத்தை டெபாசிட் செய்ய சொல்லி கேட்காது. இதுபோன்ற அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் வரும் போது கவனமாக இருக்கவும்.
புகார்
பிஎப் அலுவலகத்திலிருந்து அழைக்கிறோம் என எதாவது அழைப்பு வந்தால் அவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு அழைக்குமாறு கூறிவிட்டு உடனே ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கவும். மேலும் இதுபோன்ற அழைப்புகள் வரும் போது எந்த விவரங்களையும் பகிரக்கூடாது.
பாதுகாப்பு அவசியம்
பிஎப் கணக்கு எண், பான் எண், ஆதார் எண், யுஏஎன் உள்ளிட்ட விவரங்களை மொபைல் போனில் டிஜி லாக்கர் தவிர வேறு எங்கு சேமித்து வைக்காதீர்கள். இந்த விவரங்கள் மோசடியாவார்களிடம் கிடைக்கும் போது பணத்தை ஏமாற நேரிடலாம்.