2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் குறித்த கூட்டத்தில், இன்று எந்த வட்டி விகிதமும் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு, வட்டியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இது கடந்த 2019 - 20ம் நிதியாண்டினை போலவே, 2020 - 21ம் நிதியாண்டில் 8.5% ஆகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு என்ன?
இந்த கூட்டத்தில் வட்டி விகிதமானது குறைக்கப்பட்டால், மாத சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு வரை வட்டி கிடைக்காதது குறித்து கவலையில் இருக்கும், EPF சந்தாதாரர்கள் தற்போது மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.
நெருக்கடியான காலகட்டம்
கொரோனா நெருக்கடியின் போது, EPF-லிருந்து மக்கள் பெரும் தொகையை எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையும் மோசமான சரிவினை நோக்கி சென்றது. மேலும் EPF -ல் மக்களின் பங்களிப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO விகிதங்களைக் குறைக்கலாம் என்றும் கருதப்பட்டது.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
கடந்த 2019 - 20ம் நிதியாண்டிலேயே ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி விகிதத்தை 8.50% ஆக குறைத்தது. இதுவே 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வட்டி விகிதம் குறைவு என்பதால், இந்த அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனெனில் தொடர்ச்சியாக வருடா வரும் வட்டி குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டும் குறைக்கப்படலாம் என்ற கருத்து EPF சந்தாதாரர்கள் மத்தியில் நிலவியது.
6 கோடி பேர் பலன்
இந்த EPF நாடு முழுவதும் 6 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் கே ஒய் சி பிரச்சனைக்கு மத்தியிலும் பலர் தங்களது பணத்தினை எடுக்க முடியாமல் தவித்து வந்தனர், இந்த நிலையில் தற்போது ஆறு கோடி பேருக்கும் நல்ல விஷயம் சொல்லும்விதமாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.