இன்றைய சூழலில் ஒரு வேலையை கண்டுபிடிப்பதே சிரமமான விஷயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பணி நீக்கம், பொருளாதாரப் பிரச்சினை, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இப்படி பல பிரச்சனைகளால் பலர் வேலை இழந்து வருகின்றனர். இதில் பாதிக்கப்படும் ஊழியர்கள் தங்களுடைய PF சேமிப்பையே தங்களுடைய பணத் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மற்றொரு வேலையை கண்டுபிடிக்காமல் வேலையை விட்டிருந்தால் ஒருவர் எவ்வளவு PF தொகையை உடனடியாக எடுக்க முடியும்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். 1952-ம் ஆண்டில் பழைய PF திட்ட விதிகளின்படி ஒருவர் வேலையை விட்ட பிறகு 2 மாதங்கள் வரை வேலை இல்லாமல் இருந்தால் அவர் தன்னுடைய முழு பிஎஃப் பங்களிப்பையும் எடுக்க முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானோர் பயனடைந்தனர். அனால் தற்போது EPF திட்டம் 2026-இன் கீழ் இந்த விதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வேலை இழப்புக்கு பிறகு 2 மாத காலங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் முழு தொகையையும் எடுக்க முடியாது.
2026-ஆம் ஆண்டின் புதிய விதிகளின்படி ஒருவர் எவ்வளவு PF தொகையை எடுக்கலாம்?: கடந்த மாதம் EPFO அமைப்பு வேலை இழந்தவர்கள் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு சில அறிவிப்புகளை வெளியிட்டது.
அந்த வகையில் பணியில் இல்லாமல் இருக்கும் ஒருவர் 2 மாதத்திற்கு பிறகு தங்களுடைய பிஎஃப் பங்களிப்பிலிருந்து 75% வரையிலான தொகையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25% தொகையை தொடர்ந்து 12 மாதங்கள் வரை பணியில் சேராமல் இருந்தால் தான் எடுக்க முடியும். அதாவது 1 வருடம் வேலையில்லாமல் இருந்தால் நீங்கள் 100% பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
பழைய பிஎஃப் விதிகளில் ஊழியரின் பங்களிப்பை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் தற்போதைய விதிகளின்படி நீங்கள் 75% எடுக்கும் தொகையில் உங்களுடைய பங்களிப்பு, உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு, வட்டி ஆகிய மூன்றுமே அடங்கும். இதனால் 25 சதவீத தொகை பாக்கி இருந்தாலும் வேலை இழப்புக்கு பிறகு உடனடியாக உங்களுக்கு அதிக அளவிலான தொகை கைக்கு கிடைக்கும்.
இதற்கு முன்பு வரை பணம் எடுக்கும் போது பகுதி பகுதியாக பிரித்து தான் எடுக்க வேண்டும். ஆனால் இப்போது இதையும் ஈபிஎஃப்ஓ அமைப்பு எளிதாக்கியுள்ளது. அதேபோல பழைய PF விதிகளில் அட்வான்ஸ் பெறுவதற்கு ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நீங்கள் வெறும் 12 மாதங்கள் ஈபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் உறுப்பினராக இருந்தாலே பிஎஃப் அட்வான்ஸ் தொகையை பெற முடியும்.
ஏன் இந்த மாற்றம்?: ஒரு சிலர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதற்குள் இருக்கும் இடைப்பட்ட காலத்தில் முழுமையாக பிஎஃப் பணத்தை எடுத்து வந்தனர். இதனால் அவர்களுடைய சேமிப்பும் பாதிக்கப்பட்டது. PF பணத்தை அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பிரச்சினைக்காக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஒரு உறுப்பினர் முழு தொகையையும் எடுத்துவிட்டால் அவருக்கு கூட்டு வட்டி மூலம் கிடைக்கும் வருமானமும் தடைபடும். அதோடு 75 சதவீத தொகையை எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் 25 சதவீத தொகைக்கு வட்டி சேர்ந்து கொண்டிருக்கும். 1 வருடம் வரை நீங்கள் வேலை இல்லாமல் இருந்தால் அதன் பிறகு அந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்?: அரசு 75 சதவீத தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளதே என்பதற்காக வீட்டு வாடகை. மளிகை சாமான் மற்றும் பிற அத்தியாவசிய செலவுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக அவசரகால நிதியை சேமித்து வைக்கலாம். அதுவும் தற்போதைய பணவீக்கத்திற்கு ஏதேனும் ஒரு சேமிப்பை வைத்திருந்தால் தான் பிறரிடம் கடன் வாங்காமல் வீட்டையும், உங்களையும் நிர்வகிக்க முடியும்.
இந்த ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி அன்று EPFO அமைப்பு 34 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் வங்கி கணக்கில் 8.25% வட்டியை வரவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
