ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது. அதன்படி EPFO-வின் கீழ் இருக்கும் உறுப்பினர்கள் வேலையில் சேர்ந்த தேதி, வேலையிலிருந்து விலகிய தேதி ஆகியவற்றை சரியாக அப்டேட் செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் இது போன்ற விவரங்களில் ஒரு சின்ன தவறு இருந்தாலும் அவை PF மற்றும் பென்ஷன் பெறுவதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
EPFO அமைப்பு தங்களுடைய அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளது. அதில் உங்களுடைய வேலை தொடர்பான விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பிஎஃப் பணம் எடுப்பது, உங்களுடைய பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றுவது அல்லது பென்ஷன் பெறுவதில் பிரச்சனை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே உறுப்பினர்கள் வேலையில் சேர்ந்த தேதி, வேலையில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றை சரியாக அப்டேட் செய்ய வேண்டும். ஒருவேளை தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை இன்றே சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் பிஎஃப் மற்றும் ஓய்வூதியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளது.
ஈபிஎஃப் உறுப்பினர்கள் ஒரு சில விவரங்களை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம். 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் சரிபார்க்கப்பட்ட UAN நம்பரை வைத்திருக்கும் ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் வேலையில் சேர்ந்த டேட் ஆஃப் ஜாயினிங் தேதி, வேலையில் இருந்து விலகிய டேட் ஆப் எக்சிட் தேதி போன்ற விபரங்களை ஈபிஎஃப்ஓ அமைப்பின் அனுமதி இல்லாமலேயே ஆன்லைன் மூலம் மாற்றலாம்.
அதேபோல் ஒருவர் ஜாயினிங் மற்றும் எக்சிட் தேதியை மாற்றும்போது வேலையில் பணிபுரிந்த நாட்களில் அவர் செய்த பங்களிப்பு விவரங்களும், வேலையில் இருந்து விலகிய தேதியும் சரியாக பொருந்த வேண்டும், அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதிகாரிகளின் சரிபார்ப்பு தேவைப்படும்.
அதுவே 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்னர் வழங்கப்பட்ட UAN நம்பரை வைத்திருந்தால், இணையதளத்தில் ஜாயின் டிக்லரேஷன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கண்டிப்பாக நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் ஒப்புதல் தேவை.
இது போன்ற சமயத்தில் உங்களுடைய நிறுவனம் மூடப்பட்டிருந்தாலோ அல்லது நிறுவனத்தின் சார்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தாலோ.. ஒரு சில அனுமதிக்கப்பட்ட அரசு அதிகாரியின் கையொப்பம் தேவைப்படும். அதோடு தேவையான ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஈபிஎஃப்ஓ அலுவலகம் சென்று விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தங்களுடைய விபரங்களை விரைவாகவும் எளிய முறையிலும் அப்டேட் செய்வதற்காக தான் EPFO அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. எனவே பிஎஃப் பணம் பெறுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று நினைத்தால் உடனே உங்களுடைய விவரங்களை சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications
