இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக தான் ஈபிஎஃப்ஓ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டமாக இது இருக்கிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஊழியரின் பெயரிலும் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதந்தோறும் அதில் கணிசமான அளவு பணம் வரவு வைக்கப்படும். அவர் ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தில் கணிசமான தொகை ரொக்கப் பணமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனை தான் EPS 1995 Pension என அழைக்கிறார்கள். தற்போது இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

தற்போதுள்ள விலைவாசிக்கும் 1000 ரூபாய் ஓய்வூதிய தொகை போதுமா என கேள்வி எழுப்பும் ஓய்வூதியதாரர்கள்,இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈபிஎஸ் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை மாதத்திற்கு 7,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது என கூறி மத்திய அரசின் பெயரில் வெளியிடப்பட்டதாக ஒரு ஆவணம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் மே 1ஆம் தேதியிலிருந்து உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் epfo தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் மத்திய அரசின் முத்திரையும் epf அமைப்பின் லோகோவும் போடப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது போன்ற ஒரு கடிதமாக இது இருக்கிறதே என பலரும் குழப்பம் அடைந்தனர்.

ஈபிஎப்ஓ அமைப்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் ஈபிஎஸ் 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என வெளியாகி இருக்கக்கூடிய இந்த தகவல் மற்றும் இந்த ஆவணம் போலியானது என தெரிவிக்கிறது. ஓய்வூதியதாரர்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது. தற்போதைக்கு ஈபிஎஸ் 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பிஎஃப் ஓய்வு தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்துவது , ஆட்டோ செட்டில்மெண்ட் முறைக்கு முழுமையாக மாறுவது என பல நவீன வசதிகளை கொண்டு வரும் வகையில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் கீழ் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications

