ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் கீழ் இருக்கும் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. EPFO அமைப்பு தனது உறுப்பினர்கள் PF பணத்தை எளிதாகவும், விரைவாகவும் எடுக்கும் வகையில் ஏடிஎம் வசதியைக் கொண்டு வரவுள்ளது. இதற்கு முன்பு பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டுமானால் அதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.. பிறகு அதிலிருந்து 8 முதல் 10 தினங்கள் கழித்துதான் பிஎஃப் பணம் உறுப்பினர்களின் அக்கவுண்டுக்கு வரும்.
ஆனால் இனி அப்படி நடக்காது. அவசரக் காலங்களில் உங்கள் PF பணத்தை எடுப்பதற்கு அலுவலகங்களுக்கு அலையவோ அல்லது இணையதளங்களை பயன்படுத்தவோ தேவையில்லை. எளிதாக யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்.
இந்தப் புதிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்காக இபிஎஃப்ஓ அமைப்பு சர்வர்களை மேம்படுத்தி வருகிறது. இதற்காக இனிவரும் நாட்களில் தொடர்ந்து 3 நாட்கள் PF சர்வர்கள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த 3 நாளிலும் ஆன்லைன் மூலமாக இபிஎஃப் சேவைகளை உறுப்பினர்கள் தற்காலிகமாக பெற முடியாது.
ஏடிஎம் மற்றும் யுபிஐ வசதியை வழங்குவதற்காக இபிஎஃப்ஓ அமைப்பு ஒரு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலம் உறுப்பினர்கள் தங்களுடைய வங்கி கணக்கை இணைத்துக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பேமென்ட் ஆப் மூலமாக நேரடியாக pf பணத்தை எடுக்க முடியும்.

புதிய விதிகள் என்ன?: இபிஎஃப்ஓ அமைப்பின் இந்த சேவையின் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களுடைய மொத்த பங்களிப்பில் 75 சதவீதம் வரை எடிஎம் அல்லது யுபிஐ மூலமாக எடுக்கலாம். தற்போதைய விதிகளின்படி பிஎஃப் கணக்கில் எப்போதும் 25 சதவீத பேலன்ஸ் இருக்க வேண்டும். இது எதிர்காலத்தில் உறுப்பினர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக இபிஎஃப்ஓ அமைப்பு சேமித்து வைக்கிறது.
தற்போது வரையில் 30 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் EPFO அமைப்பில் இருக்கின்றனர். இதில் 7.5 கோடி உறுப்பினர்கள் தொடர்ந்து பிஎஃப் பங்களிப்பு செய்து வருகின்றனர். EPFO அமைப்பின் மொத்த மதிப்பு தற்போது ரூ.26 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
வேலையிழப்பு, மருத்துவ செலவுகள் போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் போது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. வரவிருக்கும் ATM வசதியின் மூலம் பொதுமக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. பலர் சேமிப்பை தவிர்ப்பதற்கான காரணம் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பணம் கிடைக்காதோ என்ற பயம் தான். இதை தடுக்கும் வகையில் கண்டிப்பாக இந்த புதிய வசதி அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications