2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்புகள், மார்ச் 4ம் தேதியன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த கூட்டத்தில் வட்டி விகிதமானது குறைக்கப்பட்டால், மாத சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். கடந்த ஆண்டு வரை வட்டி கிடைக்காதது குறித்து ஏற்கனவே கவலையில் இருக்கும், EPF சந்தாதாரர்கள் தற்போது மேலும் பாதிக்கப்படுவார்கள்.
வட்டி விகிதம் குறைக்கப்படலாம்
தகவல்களின் படி, கொரோனா நெருக்கடியின் போது, EPF-லிருந்து மக்கள் பெரும் தொகையை எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையும் மோசமான சரிவினை நோக்கி சென்றது. மேலும் EPF-ல் மக்களின் பங்களிப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO விகிதங்களைக் குறைக்க முடிவு செய்யலாம்.
EPFO கூட்டம்
ஆக இந்த புதிய விகிதங்கள் குறித்து முடிவு செய்ய மார்ச் 4 ஆம் தேதி EPFO மத்திய அறங்காவலர் குழு (CBT) கூடும். தற்போதைய சூழலில் வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் உண்மை என்னவென்று மார்ச் 4 அன்றே தெரியவரும்.
எவ்வளவு வட்டி விகிதம்
கடந்த 2019 - 20ம் நிதியாண்டிலேயே ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி விகிதத்தை 8.50% ஆக குறைத்தது. இது கடந்த 2018 - 19ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது. இந்த வட்டி விகிதமானது தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், இது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக குறையும் வட்டி
ஏனெனில் கடந்த 2012 - 2013ல் வட்டி விகிதம் - 8.5%, 2013 - 2014ல் வட்டி விகிதம் - 8.75%மும், இதே 2014 - 2015ல் வட்டி விகிதம் - 8.75%மும், இதே 2015 - 2016ல் வட்டி விகிதம் - 8.8%மும், இதே 2016 - 2017ல் வட்டி விகிதம் - 8.65%மும், 2017 - 2018ல் வட்டி விகிதம் - 8.55%மும், 2018 - 2019ல் வட்டி விகிதம் - 8.65% ஆகவும், கடந்த 2019 - 2020ல் வட்டி விகிதம் - 8.5% ஆகவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த முறையும் வட்டி குறைக்கப்படலாம் என்பது EPF சந்தாரர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.