மாதச் சம்பளக்காரர்களுக்கு முதன்மையான சேமிப்பாக இருப்பது என்னவோ நிறுவனங்களில் பிடித்தம் செய்யப்படுகிற பிஎஃப் பணம் தான். இன்னும் சொல்லப்போனால் அவசர காலத்திற்கு PF பணத்தை நம்பியே பல உறுப்பினர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்டகாலமாக பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு அதன் உறுப்பினர்கள் சிரமப்பட்டு வந்தனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே, இபிஎஃப்ஓ அமைப்பு தங்களுடைய சேவைகளை டிஜிட்டல் மையமாக்க தொடங்கியுள்ளது.
பிஎஃப் பணம் எடுப்பதற்கு ஆன்லைனில் கிளைம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பணம் எப்போது வங்கி கணக்கிற்கு வரும் என்று நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வரும். பணம் இன்று வருமா? நாளை வருமா? என வழிமேல் விழி வைத்து இனி காத்திருக்க தேவையில்லை. உறுப்பினர்களின் இதுபோன்ற பிரச்சினையைத் தெரிந்து கொண்ட EPFO அமைப்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் மூலமாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த புதிய வசதி குறித்து பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா, "இனி EPFO உறுப்பினர்கள், தங்கள் PF பணத்தை யூபிஐ மூலமாக தங்கள் வங்கி கணக்கிற்கு கொண்டு வரலாம். இதற்கான டெஸ்டிங் ப்ராசஸ் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. யூபிஐ மூலம் எடுக்கப்படும் பணம், நேரடியாக EPF கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்", என்று கூறியுள்ளார்.

யூபிஐ வசதியை பெறுவது எப்படி?: உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொண்டு உங்களுடைய வங்கி கணக்கிற்கு யுபிஐ மூலமாக ட்ரான்ஸ்பர் செய்யலாம். எப்பொழுதும் போல உங்களுடைய வங்கி கணக்கிற்கு பணம் வந்தடைந்த பின், அதை நீங்கள் பிற விஷயங்களுக்கு யூபிஐ வழியாகவும் செலவு செய்யலாம் அல்லது ஏடிஎம் கார்டு மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த வசதியை பயன்படுத்தி உங்களால் முழுமையாக PF பணத்தை எடுக்க முடியாது. அவசர தேவைக்காக குறிப்பிட்ட தொகையை EPFO அமைப்பு முடக்கி வைத்திருக்கும். பெரும்பகுதியான பணத்தை நீங்கள் யூபிஐ மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது உள்ள நடைமுறை பல பிஎஃப் உறுப்பினர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. ஏனென்றால் நீங்கள் இப்போது PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இதிலும் சில மாற்றங்களை செய்தது EPFO அமைப்பு.
PF கிளைம் கோரிக்கைகளுக்கு EPFO அமைப்பு, ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் மனித தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க ஆட்டோமேஷனில் மூன்று நாட்களுக்குள் பணத்தை செட்டில் செய்து வருகிறது. ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையிலான தொகை தற்போது ஆட்டோ செட்டில்மெண்ட் மூலமாகவே அனுப்பப்பட்டு வருகிறது. அவசர செலவுகள், பிள்ளைகளின் கல்வி செலவுகள், திருமண செலவுகள் மற்றும் வீடு கட்ட தேவைப்படும் செலவுகளுக்கு இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறை பெரிதும் உதவியாக இருக்கிறது. அதில் தற்போது வரவிருக்கும் யூபிஐ முறை இன்னும் ஜெட் வேகத்தில் உறுப்பினர்களுக்கு பணம் சென்றடைய உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு கூடுதலாக வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்யவும் EPFO அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ நம்பருக்கு "ஹலோ" என்று ஒரு மெசேஜ் செய்தால் போதும் சட்டென உங்களுடைய pf பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். இனி வரவிருக்கும் காலங்களில் பிஎப் உறுப்பினர்கள் ஒரு சில நொடியில் வீட்டில் இருந்தே சில சேவைகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications