பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் ஒவ்வொருவரின் மனதிலும் ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? என்ற கேள்வி இருக்கும். EPFO அமைப்பு எம்ப்ளாயி பென்ஷன் ஸ்கீம் (EPS) என்று சொல்லப்படுகிற ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை அதன் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது. EPS திட்டத்தைப் பற்றி பேசும்போது பலருக்கும் பல சந்தேகங்கள் எழும். எப்படி ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது? ஓய்வூதிய வரம்பு உயர்த்தப்பட்டால் யாருக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? என்ற விஷயங்கள் எல்லாம் இன்னும் சிலருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. இந்தப் பதிவில் அது குறித்த விபரங்களைப் பார்ப்போம்.

EPS திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெற என்ன தகுதி வேண்டும்?: EPS திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். பத்து ஆண்டுகள் பணிபுரிந்து EPFO அமைப்பில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். தற்போது வரையில் இந்த ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ. 15,000 என்ற சம்பளத்தின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது.
பென்ஷன் தொகை எவ்வாறு கணக்கிடப்படும்?: EPS திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.
EPS பென்ஷன் = (கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளம் X பணிபுரிந்த ஆண்டுகள்) / 70
அதுவே 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஒருவர் பணிபுரிந்து தொடர்ந்து EPFO அமைப்பில் பங்களிப்பு செய்து வந்தால் அவருக்கு 2 ஆண்டுகள் போனஸாகக் கிடைக்கும். நீண்ட காலத்திற்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையும் சற்று அதிகமாக இருக்கும். EPS திட்டத்தில் சிறந்த நன்மைகளைப் பெற பணிக்காலம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
யாருக்கெல்லாம் ரூ.1,000 பென்ஷன் கிடைக்கும்?: தற்போது அரசு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை 1,000 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. அதாவது ஒருவர் மாத மாதம் குறைந்த சம்பளமே வாங்கி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக செல்வி என்ற பெண் மாதத்திற்கு ரூ. 5000 முதல் ரூ. 6000 மட்டுமே சம்பளமாக வாங்கி வருகிறார். அவர் 10 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து தனது பணிக்காலத்தை முடித்து விட்டார் என்றால் பார்முலாவின் படி அவருடைய பென்ஷன் 700 முதல் 800 ரூபாயாக மட்டுமே இருக்கும். ஆனால் அவருக்கு அரசு 1,000 ரூபாயை வழங்கும். தற்போது வரை இந்த பென்ஷன் தான் வழங்கப்படுகிறது. அதாவது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்முலாவின் படி யாருக்கெல்லாம் ஆயிரத்திற்கு கீழ் பென்ஷன் தொகை வருகிறதோ? அவர்களும் தற்போது ரூ.1,000 பெற்று வருகின்றனர்
இப்படி இருக்கையில் அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 2,000 ரூபாயாகவோ அல்லது 3,000 ரூபாயாகவோ மாற்றினால் அது குறைந்தபட்ச பென்ஷன் பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலே உதாரணத்தில் பார்த்த செல்வி 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாயை பென்ஷனாக பெறுவார்.
அதுவே பார்த்தி என்ற நபர் 25 ஆண்டுகள் பணிபுரிந்து கூடுதலாக 2 போனஸ் ஆண்டுகளையும் கொண்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். மொத்தமாக இவர் பணிபுரிந்த காலம் 27 ஆண்டுகள். தற்போது இவருடைய சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் சராசரி சம்பளம் மட்டுமே கணக்கிடப்படும்.
கொடுக்கப்பட்டுள்ள ஃபார்முலாவின் படி பார்க்கும்போது பார்த்தியின் ஓய்வூதியம் 5,785 ரூபாயாக இருக்கும். அவருடைய சராசரி சம்பளம் ரூ.15,000 மற்றும் அவருடைய பணிக்காலமான 27 ஆண்டுகளையெல்லாம் வைத்து கணக்கிட்டால் இந்தத் தொகை கிடைக்கும். தற்போது அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 2000 ரூபாயாகவோ அல்லது 3000 ரூபாயாகவோ மாற்றினால் இவரைப் போன்ற நபர்களுக்கு பலன் கிடையாது. ஏனெனில் இவர்களுக்கு ஏற்கனவே தோராயமாக 6,000 ரூபாய் வரை பென்ஷன் கிடைக்கிறது. அப்படி இருக்கையில் அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7,000 ரூபாயாக மாற்றினால் இவரை போன்ற நபர்கள் பலன் பெறுவார்கள்.
ஒருவேளை சம்பள வரம்பு அதிகரித்தால் ஒவ்வொரு நபரின் பிஎஃப் பங்களிப்பும் அதிகரிக்கும். அதே வேளையில் அவர்கள் நிறுவனத்தின் சார்பில் செய்யப்படும் பங்களிப்பும் அதிகரிக்கும். அதோடு பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பு உயர்த்தப்பட்டாலும் குறைவான பென்ஷன் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications