இந்திய பங்கு சந்தையில் சமீப வாரங்காளாக அதிகளவிலான ஏற்ற இறக்கம் நிலவி வருகின்றது. தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டு வருகின்றன.
இதன் காரணமாக தொடர்ந்து இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
எனினும் கடைசியாக கடந்த இரண்டு அமர்வுகளாகவே சந்தையானது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் முதலீடும் வளர்ச்சி கண்டுள்ளது.
சொத்து மதிப்பு அதிகரிப்பு
கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 4.73 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் சென்செக்ஸ் 344.63 புள்ளிகள் அதிகரித்து, 53,760.78 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இதே திங்கட்கிழமையான இன்று சென்செக்ஸ் 760.37 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.14% அதிகரித்து, 54,521.15 புள்ளிகளாக முடிவடைந்தது.
எவ்வளவு அதிகரிப்பு
இந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 4,73,814.1 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்து, 2,55,39,794.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் 54,000 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருகின்றது. இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிவினைக் கண்ட பங்குகளில் முதலீடு
தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் பங்கானது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி பங்குகள், டெலிகாம் பங்குகள், மெட்டல் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சந்தையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
டாப் கெயினர்கள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ் இந்த் வங்கி, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, நெஸ்டில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச் டி எஃப் சி பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.