தங்கத்திற்கு இணையாகப் பார்க்கப்பட்ட பிட்காயின் மூலம் அமரிக்கா நாடாளுமன்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பணம் அனுப்பப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அமெரிக்காவின் கருவூல செயலாளரான ஜெனட் யெலன், தவறான செயல்களுக்குப் பிட்காயின் பயன்படுத்துவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பிட்காயின் பயன்பாட்டையும் அதன் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதே நேரத்தில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவின் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தை பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து அதிகளவிலான முதலீட்டைப் பெற்று வருகிறது.
இதன் எதிரொலியாகப் பிட்காயின் மதிப்பு தனது 41,900 டாலரில் இருந்து 31,000 டாலருக்குக் குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிட்காயினுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தை மதிப்பீட்டைக் கொண்டு இருக்கும் எதிரீயம் திங்கட்கிழமை புதிய உச்சத்தை அடைந்துவிட்டுத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் எதிரியம் சுமார் 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து 1,470 டாலர் என்ற உச்ச விலையை அடைந்தது. இதனால் பிட்காயின் போல் எதிரியமும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மளமளவெனச் சரியத் துவங்கியது.
இதன் எதிரொலியாக 6.43 சதவீத சரிவில் 1,311.28 டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் எதிரியம் கிரிப்டோகரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 160 பில்லியன் டாலரில் இருந்து 150 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிட்காயின் சரிவுக்குப் பின் முதலீட்டாளர்கள் எதிரியம் பக்கம் திரும்பிய காரணத்தை இத்துறை முதலீட்டு வல்லுனர்கள் எதிரியம் 3,000 டாலர் வரையிலான உயர்வை அடையும் எனக் கணித்தனர். ஆனால் 6 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது.
எதிரியம் உருவாக்கப்பட்டுச் சுமார் 7 வருடம் முடிந்த நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகக் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த ஈர்ப்பு தொடர்ந்து நீடிக்கவில்லை என்பது தான் உண்மை.