நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் வழியாக ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயத்தின் மதிப்புத் திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.99 டாலருக்குக் கீழ் சரிந்து 20 ஆண்டுகளில் இல்லாத சரிவை எதிர்கொண்டு உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பா பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், இதற்குப் பழி வாங்கும் பொருட்டு ஜெர்மனி உட்படப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் விநியோகம் ஏற்கனவே 10 நாட்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 3 நாட்களுக்குப் பராமரிப்பு பணிகளுக்காக முடக்கியுள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு 0.99 கீழ் சரிந்து 20 வருட சரிவை பதிவு செய்துள்ளது.
யூரோ - டாலர்
யூரோ திங்கட்கிழமை வர்த்தகத்தில் 0.70 சதவீதம் சரிந்து 0.9884 டாலராக இருந்தது, இது டிசம்பர் 2002 க்குப் பிறகு மிகக் குறைவான அளவாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஐரோப்பிய நாணயம் டாலருக்கு எதிராகத் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.
ரஷ்யா
ரஷ்ய எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் வெள்ளிக்கிழமை, வார இறுதியில் திறக்கப்படவுள்ள நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என்று கூறியது. இது ஐரோப்பிய பொருளாதாரத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
எண்ணெய் கசிவு
ஏற்கனவே திட்டமிடப்பட்ட மூன்று நாள் பராமரிப்பு நடவடிக்கையின் போது ஒரு டர்பைனில் எண்ணெய் கசிவு இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும், அதைச் சரிசெய்யும் வரை பைப்லைன் குழாய் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன்
பால்டிக் கடலுக்கு அடியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகில் இருந்து ஜெர்மனிக்குச் செல்லும் குழாய் வழியாக எரிவாயு விநியோகம் சனிக்கிழமையன்று மீண்டும் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது ரஷ்யா எண்ணெய் கசிவு இருப்பதாகக் கூறி எரிவாயு விநியோகத்தைத் துண்டித்துள்ளது.
சீமென்ஸ் டர்பைன்
கனடாவில் பழுதுபார்க்கப்பட்ட சீமென்ஸ் டர்பைன் ரஷ்யா-வுக்குத் திரும்புவதைத் தடுத்துள்ள ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் காரணமாக நோர்ட் ஸ்ட்ரீம் பைப்லைன் வழியாக விநியோகம் குறைக்கப்பட்டு உள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.