இந்திய அரசு எரிபொருள் செலவுகளைக் குறைக்கவும், பருவ நிலை மாற்றத்திற்காகவும் மாற்று எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இந்தியாவில் நீண்ட தூர எலக்ட்ரிக் வாகன பயணத்தில் பல தடைகள் இருக்கும் வேளையில் இதற்கான தளத்தைப் பல தரப்பட்ட நிறுவனங்கள் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்கச் சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் ஒரு முக்கியமான திட்டத்தை முன்வைத்தது.
இந்தத் திட்டத்தைத் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆதரித்துள்ளது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
சிறப்புக் கடன் திட்டம்
இந்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க Priority Sector Lending பிரிவின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கான கடனை அளிக்கத் திட்டத்தை முன்வைத்தது.
ரிசர்வ் வங்கி
இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி ஆதரித்துள்ள நிலையில், இத்திட்டம் இறுதி ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், எலக்டரிக் வாகனங்களுக்கான கடன் மிகவும் குறைந்த வட்டியில் மக்களுக்கு அளிக்க முடியும்.
குறைந்த வட்டியில் கடன்
தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை ஆட்டோமொபைல் கடன் பிரிவில் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. Priority Sector Lending பிரிவு என்பது பொதுவாகவே ஒரு துறை வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அத்துறை வர்த்தகத்தை ஊக்குவிக்கக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் கார்
இந்நிலையில் Priority Sector Lending பிரிவின் கீழ் கடன் அளிக்கப்படுவதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனின் வட்டி அளவு பெட்ரோல், டீசல் கார்களுக்கான வட்டி அளவை விடவும் குறைவாக இருக்கும் என்பதால் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கும், அதேவேளையில் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
கிளாஸ்கோவ் பருவநிலை மாநாடு
சமீபத்தில் கிளாஸ்கோவ்-ல் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இந்தியா 2030க்குள் 1 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், 2070க்குள் நெட் ஜீரோ நிலையை அடையவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி
இந்திய அரசின் இந்த முக்கியமான இலக்கை அடைய இந்த Priority Sector Lending பிரிவு கடன் ஒரு சிறு துவக்கமாக இருக்கும், இதேபோல் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி அதிகரிக்கவும் இத்திட்டம் பெரிய அளவில் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.