இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், டெல்லி மாநில அரசு எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி தனது உற்பத்தியை அதிகரிக்க 635 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது.
ஏதர் எனர்ஜி புதிய முதலீடு
ஏதர் எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைத்திருக்கும் தனது உற்பத்தி தளத்தில் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்க அடுத்த 5 வருடத்தில் சுமார் 635 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்து பல்வேறு மேம்பாடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய முதலீட்டின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாகும்.
ஒசூர் தொழிற்சாலை
ஏதர் எனர்ஜி ஒசூர்-ல் அமைத்திருக்கும் தொழிற்சாலையில் ஜனவரி முதல் உற்பத்தி பணிகளைத் துவங்கியுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பைக்குகள் 90 சதவீதம் பொருட்கள் ஏதர் எனர்ஜி தனது தளத்திலேயே சொந்தமாகத் தயாரித்து உருவாக்கப்பட்டவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகவும் முக்கியமான பேட்டரி-யையும் ஏதர் எனர்ஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
1.1 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இப்புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.1 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், 1.2 லட்சம் பேட்டரிகளையும் தயாரிக்க முடியும் என ஏதர் எனர்ஜி தெரிவித்துள்ளது. இப்புதிய முதலீட்டின் மூலம் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையான ஒரு வளர்ச்சியை அடைய அடுத்தகட்ட முயற்சிகளை எடுக்க முடிவு செய்துள்ளது ஏதர் எனர்ஜி.
லித்தியம் அயன் பேட்டரி
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரியை தாண்டி, இப்புதிய முதலீட்டின் மூலம் உலகளவில் பயன்படுத்தி வரும் லித்தியம் அயன் பேட்டரியை தயாரிக்கும் மிகவும் முக்கியமான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு இந்நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும். உற்பத்தி அளவு மேம்பாடு மற்றும் லித்தியம் அயன் பேட்டரிக்காகவே புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
புதிய வேலைவாய்ப்பு
இப்புதிய முதலீடு மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு முடியும், இதுமட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஊழியர்களை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பயிற்சி பெற்ற ஊழியர்களாக உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீடு அமையும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப்
எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிட்ட ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஏதர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ஹீரோ நிறுவன முதலீட்டுக்குப் பின் ஏதர் எனர்ஜி உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.