இந்திய மக்களைக் கொரோனா தொற்று ஒருபக்கம் பாடாய்ப்படுத்தி வந்தாலும், இந்தக் கருப்புப் பூஞ்சை நோய் மக்கள் மத்தியில் ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் கருப்புப் பூஞ்சை நோய் பெயரில் பரவி வரும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று உடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இந்தப் பயம் சற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் மருத்தை இந்திய பார்மா நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளதாகவும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் வெற்றி
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் என்னும் பார்மா நிறுவனம் இந்திய மக்களைப் பயமுறுத்தி வரும் கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் Posaconazole API என்ற மருந்தை வெற்றிகரமான தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
மியூகோர்மைகோசிஸ் - கருப்புப் பூஞ்சை நோய்
கொரோனா தொற்றுக்குப் பின் உடலில் உருவாகும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனப்படும் கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் ட்ரைஅசோல் ஆன்டிஃபங்கள் ஏஜென்ட் மருந்தான Posaconazole-ஐ எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் தயாரித்துள்ளது. இந்த மருந்து வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
20 சதவீதம் தடாலடி வளர்ச்சி
இந்த அறிவிப்பு வெளியானதில் எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று வரையில் 330 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்கியூட் அளவை அடைந்து ஒரு பங்கு விலை 399.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனப் பங்குகள்
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் 80 லட்சம் பங்குகள் வர்த்தகச் சந்தையில் உள்ளது. இதில் 74.15 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் கையில் இருக்கும் வேளையில் 25.85 சதவீத பங்குகள் மட்டுமே ரீடைல் வர்த்தகச் சந்தையில் உள்ளது.
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் மாஸ்
எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே கொரோனா தொற்றுப் பாதிப்பு உடையவர்களின் உயிரைக் காப்பாற்றும் ரெம்டேசிவிர், ஒசெல்டமிவிர் ஆகிய மருந்தைத் தயாரித்து வெற்றி கண்டு உள்ள வேளையில் தற்போது மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் Posaconazole மருந்தைத் தயாரித்து வெற்றிகண்டுள்ளது.
40 நாடுகளுக்கு வர்த்தகம்
ஹைதராபாத்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பல API மருந்துகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்ததுள்ளது. மேலும் எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா மட்டும் அல்லாமல் சுமார் 40 நாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.