இந்தியாவுக்கே 1990-கள் மிக முக்கியமான கால கட்டம். இன்று இந்த செய்தியை நாம் மொபைல் போனில், 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்தி படித்துக் கொண்டு இருக்கிறோம் என்றால், அதற்கான விதை 1990-களில் பி வி நரசிம்மா ராவ் காலத்தில் போடப்பட்டது.
தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை வெறும் ஏட்டளவில் கொண்டு வந்திருந்தால் இந்த அளவுக்கு இந்தியா வளர்ச்சி கண்டு இருக்க முடியாது.
அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வர, ப சிதம்பரம், மன்மோகன் சிங் போன்ற பல பெரிய தலைவர்கள் தொடங்கி, அதிகாரிகள் வரை பலரும் உதவினார்கள்.
சி ரங்கராஜன்
அந்த பட்டியலில் தவிர்க்க முடியாத நபர் தான் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சி ரங்கராஜன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துவிட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் ஒரு தேர்ந்த ஆசிரியர் கூட. இந்தியாவின் முன்னணி எம்பிஏ பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஐஐஎம் அஹமதாபாத்தில் எல்லாம் பாடம் எடுத்து இருக்கிறாராம்.
முக்கிய காலம்
1992 - 1997 வரையான, இந்தியாவின் முக்கியமான பொருளாதார கால கட்டத்தில் ஆர்பிஐ ஆளுநராக இருந்தவர். உலகமயம், தாராளமயம், தனியார்மயம் தொடர்பான பல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு. அதற்கு தகுந்தாற் போல, ஆர்பிஐ-யை சிறப்பாக வழி நடத்தியவர். அதன் பின் மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளில் இருந்து இருக்கிறார்.
பெரிய பதவி
இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் ஐஐஎம் போன்ற பெரிய கல்லூரிகளிலேயே பாட புத்தகங்களாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு பெரிய அறிவாளி. கடந்த 2009 - 14 கால கட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பதவியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
சமீபத்தில், சென்னையில் நடந்த IIT-Madras tech festival Shaastra-வில் பேசிய போது, இந்தியா, 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அல்லது வரும் 2025-க்கும் வளர்வது சாத்தியமே இல்லை என நெற்றியில் அடித்தாற் போல தெளிவாக தன் கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
ஏன்
இந்தியப் பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலர் தொட வேண்டும் என்பது ஒரு ஆசை தான். தற்போது இந்தியப் பொருளாதாரம் சுமாராக 2.7 ட்ரில்லியன் டாலராக இருக்கிறது. ஆக சுமார் இரண்டு மடங்கு வளர வேண்டும். ஆண்டுக்கு 9 சதவிகித ஜிடிபி வளர்ச்சி இருந்தால் கூட 5 ட்ரில்லியன் டாலர் இலக்கைத் தொட 7 ஆண்டுகள் ஆகும் எனச் சொல்லி இருக்கிறார்.
எதார்த்தம் இது தான்
ஒருவேளை, ஆண்டுக்கு 8 சதவிகிதம் ஜிடிபி வளர்ச்சி கண்டால் கூட, இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலரைத் தொட 8 - 9 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் தற்போதைய சூழலில் இந்த 8 அல்லது 9 சதவிகித வளர்ச்சி எல்லாம் சாத்தியமே இல்லை எனவும் புள்ளி விவரங்களை அடுக்குகிறார்.
கடந்த காலம்
கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5 சதவிகிதம் தான். அதே போல, அடுத்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 4.5 சதவிகிதம் தான். அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரலாம். அப்படியே மீண்டும் வந்தாலும் 6 சதவிகிதத்துக்கு மேல் ஜிடிபி வளர்ச்சி காணாது என பொளேர் பதில் கொடுத்து இருக்கிறார்.
இந்திய பொருளாதார மந்த நிலை
தற்போது இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் குறைந்து இருக்கிறது. முதலீடுகள், பொருளாதாரத்தின் முக்கியமான பிரதிபலிப்புகள். எனவே இந்தியாவில் முதலீடுகள் கொண்டு வருவதற்கு இருக்கும் சிக்கல்களைச் சரி செய்ய வேண்டும் என அட்வைஸும் கொடுத்து இருக்கிறார்.