இன்றெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ஸ்கூட்டியாவது இருக்கிறது. மக்கள் 2 சக்கர வாகனங்களைத் தான் தங்கள் போக்குவரத்திற்கு பெரிதும் சார்ந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் பெட்ரோல் விலை 1 ரூபாய் அதிகரித்தாலும் சிலருக்கு நடுக்கமே வந்துவிடுகிறது. போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாகன ஓட்டிகளின் சுமையை குறைக்க ஒரு மாற்று வழி தயாராகி வருகிறது. அதுதான் எத்தனால் ப்ளெண்டிங். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.கே.ஜெயின் கூறியுள்ளார்.
ஜெயின் சமீபத்தில் டைம்ஸ் நவ் டிஜிட்டலுக்கு பேட்டி அளித்தார். அதில் பெட்ரோல் விலை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். போர் பதற்றத்தின் காரணமாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை கூறிய ஜெயின், எத்தனால் பிளேண்டிங் என்று சொல்லப்படுகிற பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறையும் என்று கூறினார்.

அது ஏன் ரூ.20 குறைகிறது என்ற கேள்விக்கும் அவர் பிரேசில் நாட்டை உதாரணமாக கூறி பதிலளித்திருந்தார். அதாவது பிரேசிலில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இரண்டு விதமான நாசில்கள் இருக்கும். ஒன்றில் பெட்ரோல் வரும். மற்றொன்றில் E85 மற்றும் E100 எனும் எத்தனால் கலந்த எரிபொருள் வரும். இந்தியாவில் E100 எத்தனாலை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது அதற்கு VAT வரியும் கிடையாது. E100-இல் 70% கச்சா எண்ணெய் கிடையாது. எனவே இதற்கு VAT-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை VAT வசூலிக்கப்படுகிறது. அதுவே எத்தனால் எரிபொருள் கலக்கும் பட்சத்தில் அதற்கு வரி கிடையாது. இதனால் 20 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதோடு தற்போது ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் ஜெயின் கூறியுள்ளார். இறக்குமதி வரி, பதப்படுத்தப்படுவதற்கு ஆகும் செலவுகள் மற்றும் பிற காரணிகளையும் கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அரசு ஏற்கனவே பெட்ரோல் விலைக்கு மானியம் வழங்கி வருகிறது.
கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பால் OMC நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.1700 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. உண்மையிலேயே பார்க்கும் போது இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால் மானியங்கள் மற்றும் விலை கட்டுப்பாட்டின் காரணமாக தற்போது வரை மக்கள் ரூ.100 செலுத்தி வருகின்றனர்.
விரைவில் இந்தியாவில் சுமார் 100 பெட்ரோல் பங்குகளில் மட்டும் சோதனை முயற்சியாக டூயல் டிஸ்பென்சிங் பம்புகளை கொண்டுவர ஓஎம்சி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதாவது பெட்ரோல் பங்கில் ஒரு பக்கம் E85 எத்தனால் கலந்த பெட்ரோல் வரும். மறுபக்கம் E20 எத்தனால் கலந்த பெட்ரோல் வரும். இதில் உங்கள் வண்டிக்கு தேவையான பெட்ரோலை போட்டுக் கொள்ளலாம்.
சரி புதிய எத்தனால் கலந்த பெட்ரோல் தயாராகிவிட்டது. ஆனால் அதற்கு ஏற்றார் போல் எங்களிடம் வண்டி இல்லையே என்றுதானே யோசிக்கிறீர்கள்.. அதற்காக "Flex Fuel" வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். முதற்கட்டமாக மாருதி சுசுகி நிறுவனம் வருகின்ற ஜூன் 4-ம் தேதி ஃபர்ஸ்ட் ஃப்ளக்ஸ் எரிபொருள் வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒரு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் ஒன்றை தொடங்கிவிட்டால் அடுத்தடுத்து மற்ற நிறுவனங்களும் அதே திசையில் செல்லும் அல்லவா? இனிவரும் காலங்களில் இது போன்ற ஃப்ளக்ஸ் எரிபொருள் வாகனங்கள் அதிகமாகத் தொடங்கும். ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய்க்காக இந்தியா கோடிகளை செலவு செய்கிறது. இந்த எத்தனால் கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டால் பணம் மிச்சமாவதோடு, நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டும் காலியாகாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications