இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஜியோ ஏற்கனவே இந்திய டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த நிலையில், உலகமே வியக்கும் வகையில் ஒரு மாபெரும் கூட்டணியை அமைந்துள்ளது. அமெரிக்கச் சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 43,574 கோடி ரூபாய் நிதியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் சேவை அளிக்கும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் பெறுகிறது. இந்த முதலீட்டுக்கு பின் மாபெரும் திட்டங்க்ள உள்ளது, இக்கூட்டணியால் இந்திய முழுவதும் டிஜிட்டல்மயமாக உள்ளது என்றால் மிகையில்லை.
4.62 லட்சம் கோடி ரூபாய்
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவை தளத்தின் மதிப்பு 4.62 லட்சம் கோடி ரூபாய், அமெரிக்க டாலர் மதிப்பில் 65.95 பில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை அடுத்த பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் இருப்பது இந்தியா தான். இந்நிலையில் இந்தியாவில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவரும், விளம்பர வருவாய் பெறவும், அதிக வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என முக்கியமான நோக்கத்துடன் ஜியோ நிறுவனத்தில் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
முதல் முறையாக
பேஸ்புக் இதுவரையில் எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் சில சதவீத பங்குகளுக்காக இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது இல்லை. இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவன சில வருடங்களுக்கு முன்பு முழுமையாகக் கைப்பற்றிய வாட்ஸ்அப் நிறுவனம் கூட 16 பில்லியன் டாலர் மதிப்பில் தான் கைப்பற்றியது. ஆனால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய டெக்னாலஜி துறையில் இது தான் மிகப்பெரிய முதலீடு என்ற வரலாற்றையும் படைத்துள்ளது.
ரிலையன்ஸ் பங்கு மதிப்பு
ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீட்டு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 7.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் பங்குகள் சுமார் 1,324.55 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
முக்கியத் திட்டம்
இந்த ஜியோ - பேஸ்புக் கூட்டணி இந்தியாவில் சுமார் 6 கோடி சிறு, குறு மற்றும் நிறுவனங்கள், 12 கோடி விவசாயிகள், 3 கோடி சிறு வியாபாரிகள் மற்றும் வகைப்படுத்தாத துறையில் இருக்கும் பல கோடிக்கணக்கான நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவையைக் கொண்டு சேர்ப்பது தான் முக்கியமான திட்டமாக உள்ளது.
இந்த டிஜிட்டல் சேவை மூலம் இந்தியா அடுத்தகட்ட டஜிட்டல் பரிமாற்ற வளர்ச்சியைச் சந்திக்க உள்ளது.
ஜியோ மார்ட்
மேலும் ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த டிஜிட்டல் வர்த்தகத் தளமான ஜியோமார்ட் மற்றும் பேஸ்புக்-இன் வாட்ஸ்அப் இணைந்து இந்தியாவில் சுமார் 3 கோடி மளிகை மற்றும் பலசரக்கு வியாபாரிகளை இணைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்க உள்ளது.
ஜியோமார்ட் மற்றும் வாட்ஸ்அப் இணைந்து அளிக்க உள்ள புதிய சேவை மூலம் மக்கள் தங்களது தினசரி தேவைகளை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்து அருகில் இருக்கும் கடைகள் மூலம் பொருட்களை வாங்கி வீட்டிற்கே டெலிவரி பெற முடியும்.
வேலைவாய்ப்பு
இதன் மூலம் இந்தியாவில் பல பிரிவுகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாக்க முடியும் என ஜியோ - பேஸ்புக் கூட்டணி அறிவித்துள்ளது.
ஜியோமார்ட் மற்றும் வாட்ஸ்அப் இணைந்து அளிக்க உள்ள புதிய சேவை மூலம் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் சேவை பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் மக்கள் எளிதாக அனைத்து விதமான பொருட்களை நொடிப் பொழுதில் வாங்க முடியும் அளவிற்குத் தளத்தை உருவாக்க உள்ளது இப்புதிய கூட்டணி.
முகேஷ் அம்பானி
இந்தியாவில் ஏற்பட உள்ள டிஜிட்டல் பரிமாற்ற வளர்ச்சியில் ஜியோ மற்றும் பேஸ்புக் முக்கியப் பங்காற்ற உள்ளது. இதனால் பல கோடி இந்தியர்களுக்கு டிஜிட்டல் சேவைகள் கொண்டு சேர்க்கப்படும். கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்த பின்பு நிச்சயம் இந்திய பொருளாதாரம் மிகக் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்திக்கும் என முழுமையாக நம்புகிறேன் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை 32.8 கோடி, அதேபோல் பேஸ்புக் கட்டுப்பாட்டில் இயங்கும் வாட்ஸ்அப் 40.0 கோடி. அமெரிக்காவைத் தாண்டி அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நாடும் இந்தியா தான். இதன் காரணமாகத் தான் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்துடன் பேஸ்புக் ஜியோ உடன் கூட்டணி வைத்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள்
ஜியோ துவங்கப்பட்டு வெறும் 4 வருட காலத்தில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 38.8 கோடியாக உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் தர பகுதிகளில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்து வருகிறது ஜியோ.