உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் மீது கடந்த வருடம் பெடரல் மற்றும் ஸ்டேட் கட்டுப்பாட்டு ஆணையங்கள் நம்பிக்கையற்ற நடவடிக்கை தொடர்பாகப் போடப்பட்டு இருந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் மீது அதிகவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தால் முதல் முறையாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 1 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் அமெரிக்கச் சந்தையில் குறிப்பாகச் சமுக வலைத்தள துறையில் மோனோபோலியாக இயங்குகிறது எனக் குற்றம்சாட்டி பெடரல் டிரேட் கமிஷன் மற்றும் 40 மாநிலங்கள் சேர்ந்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வாஷிங்டன் மாநில நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த வாஷிங்டன் மாநில நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் போசாபெர்க் மோனோபோலியாகப் பேஸ்புக் இயங்குகிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தாலும், 53 பக்க அறிக்கையையும் குற்றச்சாட்டையும் நிராகரித்து, மீண்டும் மறு பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார்.
மோனோபோலி பிரச்சனை
நீண்ட காலமாக பேஸ்புக் மீது இருந்து மோனோபோலி பிரச்சனையை இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இக்காரணத்தால் புதிதாக முதலீடு செய்வோர் எண்ணிக்கையும், முதலீட்டு அளவும் அதிகரித்துள்ளது.
பேஸ்புக் சந்தை மதிப்பு
இதன் வாயிலாக நேற்றைய வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 1 டிரில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க டெக் நிறுவனங்கள் மத்தியில் புதிதாக ஒரு டிரில்லியன் டாலர் நிறுவனம் உருவாகியுள்ளது.
டிரில்லியன்
சர்வதேச பங்குச்சந்தையில் பேஸ்புக் போல் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்த நிறுவனங்கள் பல இருந்தாலும், 2 டிரில்லியன் டாலர் அளவீட்டைக் கடந்த நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுவரை 2 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே.
மைக்ரோசாப்ட் நிறுவனம்
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக, தொடர் வர்த்தக வளர்ச்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்புத் தற்போது 2 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது. சத்ய நாடெல்லா தலைமையில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.