உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா-வுக்கு 2022ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்தே மோசமான காலம் தான், சந்தை மதிப்பீட்டில் அதிகப்படியான சரிவு.
யூடியூப் மற்றும் டிக்டாக் போட்டியின் காரணமாக முதல் முறையாக வாடிக்கையாளர் வளர்ச்சி அளவீட்டில் சரிவைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் முக்கிய முடிவை எடுத்துள்ளது மெட்டா..!!
மெட்டா நிறுவனம்
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என அனைத்து பிரிவுகளிலும் லாபம், வருவாய் அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பல்வேறு வர்த்தகத்தை மூடியது மட்டும் அல்லாமல் ஊழியர்கள் தங்கள் வேலையில் செயல்திறனை முழுமையாகக் காட்ட வேண்டும் இல்லையெனில் நிறுவனத்தில் இடமில்லை என மிரட்டும் வகையிலேயே ஊழியர்களிடம் பேசினார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்த அறிவிப்பு பேஸ்புக் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிர்வாகம் சத்தமில்லாமல் அமெரிக்கா முதல் உலக நாடுகளில் இருக்கும் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களைச் சத்தமில்லாமல் பணியில் இருந்து நீக்க தயராகி வருகிறது.
விளம்பர வருவாய்
மெட்டா நிறுவனத்தின் விளம்பர வருவாய் நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து மேனேஜர்களையும் தங்களது அணியில் குறைந்தது 15 சதவீத ஊழியர்களை "needs support" பிரிவில் இன்டர்நெல் ரிவ்யூவ் பிராசஸ்-ல் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
12000 ஊழியர்கள்
இந்தத் தனிப்பட்ட தேர்வு மூலம் மெட்டா நிறுவனம் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் அதாவது 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் டெக் ஊழியர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் Blind என்னும் செயலியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
30 நாள் அவகாசம்
இந்த 12000 ஊழியர்களையும் PIP-யில் போட்டுவிட்டு அடுத்தச் சில வாரத்தில் பணியில் இருந்த நீக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மெட்டா நிறுவனத்தில் பல ஊழியர்கள் 30 நாள் அவகாசம் கொடுத்து நிறுவனத்திலேயே வேறு பணிகளைத் தேடிக்கொள்ள underperforming ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.