உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காகவும் பிற காரணங்களுக்காகவும் ஊழியர்களில் சிலரை வேலைநீக்கம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீபத்தில் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தனது 10 சதவீத ஊழியர்களை செலவை குறைக்கும் நடவடிக்கையாக வேலை நீக்கம் செய்யப் போகிறது என்ற தகவல் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம்
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் வரும் மாதங்களில் செலவினங்களை குறைந்தது 10% குறைக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஊழியர்கள் குறைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் வளர்ச்சி மற்றும் அதிகரித்த போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில் உள்ளது.
பணிநீக்க நடவடிக்கை
கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட மெட்டா நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக சத்தமின்றி ஊழியர்களை வெளியேற்ற தொடங்கியுள்ளது. முன்னாள் மேலாளர்கள் அளித்த தகவலின்படி வேலைநீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
செலவை குறைக்க திட்டம்
மெட்டா நிறுவனம் செலவை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆலோசித்து வைத்த போதிலும், அதில் ஊழியர்கள் குறைப்பு தான் அதிக செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்கள்
இதுகுறித்து மெட்டா செய்தி தொடர்பாளர் ட்ரேசி கிளேட்டன் அவர்கள் கூறியபோது, 'வணிகத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது நிறுவனம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும், நாங்கள் சில விஷயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
கால அவகாசம்
வேலைநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்குவது உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற நிறுவனங்கள்
சமீபத்தில் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், 10% பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியது. மேலும், அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு கடந்த மாதம் சுமார் 3,000 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. ஸ்னாப்சாட்டின் டெவலப்பர் நிறுவனமான ஸ்னாப் இன்க்., கிட்டத்தட்ட 6,500 ஊழியர்களில் 20% பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications