உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் மிகப்பெரிய அளவில் சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2007ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டு முடிவில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
அதுமட்டுமின்றி இன்னும் வருங்காலத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் வருவாய் குறைவு
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $29.07 பில்லியனாக ஃபேஸ்புக் வருவாய் இருந்த நிலையில் தற்போது1 சதவிகிதம் குறைந்து 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $28.8 பில்லியனாக சரிவை சந்தித்துள்ளது.
ஃபேஸ்புக் பங்குகள்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததாக வெளியான செய்தியை அடுத்து பங்குவர்த்தகத்தில் அதன் பங்குகள் சுமார் 3.8 சதவீதம் சரிந்து உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் லாபம் இந்த காலாண்டில் 36 சதவீதம் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் தனது கனவு திட்டமான Metaverse மற்றும் Reality Labs திட்டங்களுக்காக சமீப காலங்களில் ரூபாய் 2.8 பில்லியன் இழந்ததாக கூறப்படுகிறது.
மார்க் ஜுக்கர்பெர்க்
இதுகுறித்து மெட்டா நிறுவனர் மற்றும் CEO மார்க் ஜுக்கர்பெர்க் கூறியபோது, 'நாங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதிக ஆற்றலை செலுத்துகிறோம் என்றும், எங்கள் முக்கிய நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என்றும், மெட்டா மற்றும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் மக்கள் வணிகங்களுக்கான மாறும் வகையில் வாய்ப்புகளை அமைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
டிக்டாக்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கடும் போட்டியாளரான சீனாவின் டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சியால், ஃபேஸ்புக் விளம்பரவருமானம் குறைந்து அதற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோ மதிப்பு குறைந்து வருவதும் வருவாய் குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
அடுத்த காலாண்டில் எப்படி இருக்கும்?
இருப்பினும் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு மொத்த வருவாய் $26-28.5 பில்லியன் வரம்பில் இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. இரண்டாம் காலாண்டில் நாங்கள் அனுபவித்த பலவீனமான விளம்பர தேவை மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
தலைமை நிதி அதிகாரி
நவம்பர் 1 முதல், தற்போதைய தலைமை நிதி அதிகாரி டேவிட் வெஹ்னர், மெட்டாவின் முதல் தலைமை வியூக அதிகாரியாக பதவி ஏற்றுக்கொள்வார் என்றும், இதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூலோபாயம் மற்றும் கார்ப்பரேட் மேம்பாட்டை மேற்பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது. மெட்டாவின் நிதித்துறையின் தற்போதைய துணைத் தலைவரான சூசன் லி, பதவி உயர்வு பெற்று, மெட்டாவின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.