உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பிரச்சனை சந்தித்து வந்த நிலையில், பல மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்தது. இதனால் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பும், சந்தை மதிப்பீடும் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எதிர் வரும் அமெரிக்கத் தேர்தல் மற்றும் அதைச் சார்ந்த விளம்பர வர்த்தகம் மற்றும் உலகில் பல்வேறு நிறுவனங்களில் செய்த முதலீடு ஆகியவை பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தியது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனருமான மார்க் ஜூக்கபெர்க்-ன் சொத்து மதிப்பு முதல் முறையாக 10 பில்லயன் டாலரை அடைந்துள்ளது.
இதோடு வேறொரு முக்கியமான காரணமும் உண்டு..!!
மார்க் ஜூக்கர்பெர்க்
சமுக வலைத்தளத்தின் மூலம் இவ்வளவு பெரிய வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும், வருமானத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு ஓரே பதில் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பேஸ்புக். பேஸ்புக் நிறுவனத்தைப் போலவே பல முன்னணி நிறுவனங்கள் சமுக வலைத்தளத்தில் இறங்கினாலும் இதுவரை யாரும் பேஸ்புக்-கிற்கு நிகராக வளர முடியவில்லை. இதுவே பேஸ்புக்-ன் மிகப்பெரிய பலம்.
இதேபோல் தனது வலிமையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொள்ளத் தனக்குப் போட்டியாகவோ, அல்லது பேஸ்புக்-ன் ஆதிக்கத்தைக் குறைக்கும் எந்தொரு நிறுவனமாக இருந்தாலும் அதை முழுமையாகக் கைப்பற்றும் வழக்கத்தை மார்க் கொண்டுள்ளதால், இவரையும் இவரது பேஸ்புக் நிறுவனத்தையும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
புதிய சேவை
அமெரிக்கத் தேர்தல் மற்றும் அதைச் சார்ந்துள்ள விளம்பர வர்த்தகத்தைத் தாண்டி மார்க் ஜூக்கர்பெர்க் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர முக்கியக் காரணம் பேஸ்புக்-ன் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த புதிய சேவையின் எதிரொலித் தான்.
இப்படி என்ன சேவை அறிமுகம் செய்துள்ளது.
டிக்டாக்
உலகம் முழுவதும் டிக்டாக் சேவைக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இதேபோன்ற சேவையை இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இது சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும், முதலீட்டுக்கான வாய்ப்பையும் கொடுத்துள்ளது.
வரலாற்று உச்சம்
இப்புதிய சேவையின் அறிமுகத்தின் மூலம் பேஸ்புக் பங்கு விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1.16 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக மார்க் ஜூக்கர்பெர்க்-யிடம் இருக்கும் 13 சதவீத பேஸ்புக் பங்குகளின் மதிப்பு உயர்ந்து 100 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
டாப் 3
இந்த அதிரடி உயர்வின் மூலம் உலகிலேயே 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் 2 பட்டியலில் 3வது ஆக நுழைந்துள்ளார் மார்க் ஜூக்கர் பெர்க்.
இப்பட்டியலில் ஏற்கனவே அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர்.
கொரோனா காலம்
இந்தக் கொரோனா காலத்தில் பல பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாகக் குறைந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் சொத்து மதிப்பு மட்டும் சில சரிவுகள் இருந்தாலும் தொடர் வளர்ச்சி அடைந்து சுமார் 22 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு இந்தக் கொரோனா காலத்தில் 75 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
மார்க் சொத்து மதிப்பு
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் பங்குகள் 52 வார உச்ச விலையான 278.89 டாலரை அடைந்த போது மார்க்-ன் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் தாண்டியது. ஆனால் வர்த்தக முடிவில் பங்கு விலை 268.44 டாலராகக் குறைந்த நிலையில் மார்க்-ன் சொத்து மதிப்பு 98.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.