மார்ச் மாதம் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி அளவீடு கடந்த 7 மாதத்தில் மிகவும் குறைவான நிலையை அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் அதிகளவிலான பாதிப்பு அடைந்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் புதிதாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வர்த்தகச் சந்தையில் பொருட்களின் தேவையும் குறைந்துள்ளது, உற்பத்தியும் குறைந்துள்ளது. இதன் வாயிலாகச் சிறு, குறு தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு துவங்கியுள்ளது.
2வது கொரோனா அலை
இந்தியாவில் 2வது கொரோனா அலை பெரிய அளவில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், தொற்றைக் கட்டுப்படுத்த அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் விதித்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் வரை முழுமையாகத் தொடரும்.
பிஎம்ஐ குறியீடு அளவுகள்
இந்நிலையில் IHS மார்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் மாதத்தில் இந்தியாவின் பிஎம்ஐ குறியீடு 55.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் இதன் அளவீடு 57.5 புள்ளிகளாகச் சரிவடைந்துள்ளது.
7 மாத சரிவு
2020 ஜூலை மாத சரிவுக்குப் பின் தொடர்ந்து 7 மாதம் அதாவது பிப்ரவரி மாதம் வரையில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மிகவும் சிறப்பாக இருந்த நிலையில், தற்போது 2வது கொரோனா அலையின் காரணமாகச் சரிவடைந்துள்ளது.
வெளிநாட்டு ஆர்டர்கள்
மார்ச் மாத காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான வெளிநாட்டு ஆர்டர்களைப் பெற்று இருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் மந்தமான உள்நாட்டுத் தேவை மற்றும் உற்பத்தி அளவீடுகள் ஆகியவற்றின் காரணமாகப் பிஎம்ஐ குறியீடு சரிவடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் தொடரும் மந்த நிலை
மேலும் மகாராஷ்டிரா உட்பட மாநில மாநிலங்களில் பகுதி பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் ஏப்ரல் மாதம் நாட்டின் உற்பத்தி அளவீடுகள் அதிகளவில் அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 5 மாநில தேர்தலும், ஆட்சி மாற்றம் குறித்த அதிர்வுகளும் நாட்டின் வர்த்தக வளர்ச்சியை மந்தமாக்கலாம்.