டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் கோராத்தாண்டவத்தினால் பல ஆயிரம் ஊழியர்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்பீடுகளை ஈடு செய்ய முடியாது என்றாலும், நிறுவனங்கள் பற்பல சலுகைகளை குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பலியான ஊழியர்கள், ESICல் பதிவு செய்திருந்தால், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் தினசரி சம்பளத்தில், 90%ம் சமமான தொகையை இரண்டு வருட காலத்திற்கு பெறுவார்கள் என அறிவித்துள்ளது. இந்த திட்டமானது கடந்த மார்ச் 24, 2020 முதல் மார்ச் 24, 2022ம் ஆண்டு வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
மக்களுக்கு துணையாக அரசு உள்ளது
இந்த பென்ஷன் தொகையானது ESIC மற்றும் EPFO மூலம் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும். கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்சூரன்ஸ் அதிகரிப்பு
முன்னதாக காப்பீட்டு தொகை 6 லட்சம் ரூபாயாக இருந்தது. இதை தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையிலான EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு, கடந்த ஆண்டு செப்டம்பரில் இதனை 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. இந்த திட்டத்தின் மூலம் கொரோனா காரணமாக ஒரு ஊழியர் இறந்து விட்டாலும் 7 லட்சம் ரூபாயினை பெறமுடியும்.
நாமினிகள் அணுகலாம்
இது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களின் நாமினிகள் இந்த தொகையை கோரலாம். ஒரு ஊழியருக்கு எந்த நாமினியும் இல்லை என்றால், இந்த உரிமை அவரது சட்டபூர்வ வாரிசுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர் யாரையும் நாமினியாக பரிந்துரைக்கவில்லை எனில், சட்டபூர்வ வாரிசுகள் இந்த தொகையை பெறுவார்கள். நாமினிகள் இந்த தொகையை பெற form 5f கொடுக்க வேண்டும்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் உதவி
இதற்கிடையில் மத்திய அரசு சனிகிழமையன்று கொரோனாவினால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுள்ளதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதே போல தமிழக முதல்வர் ஸ்டாலினும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவி தொகையை அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications