விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் தொழிலை மாற்ற விரும்பிய விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்க 6 கோடி ரூபாய் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஒரு விவசாய நாடு என்பதும், விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.
நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டும் கேள்விக்குறியாக தான் உள்ளது.
விவசாயி நிலைமை
ஊருக்கெல்லாம் உணவு கொடுக்க விவசாயி அரை வயிறு, கால் வயிறுடன் பட்டினியாக இருந்து கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
விவசாய வருமானம்
இந்நிலையில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாயத் தொழிலில் போதுமான வருமானம் இல்லை என்றும் அதனால் ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடும் தொழிலை செய்ய ரூ. 6.65 கோடி கடன் கேட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் வாங்க கடன்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தக்தோதா என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 விவசாயி கைலாஷ் பதங்கே என்பவர் தான் இந்த நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். ஆனால் போதுமான மழை இல்லாத காரணத்தினாலும் வறட்சி காரணத்தினாலும் எனக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்தும் எனக்கு உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை.
பெரிய கனவு
எனவே தான் தொழிலாக மாற்ற முடிவு செய்தேன். வங்கியில் லோன் வாங்கி ஹெலிகாப்டர் வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளேன். பெரிய நபர்கள் மட்டும் தான் பெரிய கனவுகள் காண வேண்டுமா? எங்களைப் போன்ற விவசாயிகளும் பெரிய கனவுகளை காணலாமே? எனவேதான் ஹெலிகாப்டர் வாங்க ரூ.6.65 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தொழில் போட்டி
மேலும் மற்ற தொழிலில் போட்டி அதிகம் என்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் தொழில் போட்டி இல்லை என்பதால் இந்த தொழிலை தேர்வு செய்தேன் என்றும் அவர் கூறியது வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் விவசாயி கைலாஷ் பதங்கேவின் வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு வங்கி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.