சுங்க கட்டணங்களை நேரடியாக செலுத்துவதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுப்படுத்தியது.
இதன் மூலம் சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகச் செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறையும். இது கடந்த 2014ஆம் ஆண்டிலேயே இந்த பாஸ்டேக் முறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
எனினும் கடந்த 2016ம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு பாஸ்டேக் முறை அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
சிறிய அளவிலான ஸ்டிக்கர்
பாஸ்டேக் என்பது சிறிய காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கர் போன்ற அமைப்பாகும். இது ஆர்எஃப்ஐடி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, அந்த வாகனத்துக்கான சுங்கக் கட்டணம் அதன் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் வாகனங்கள் பல நிமிடங்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரச்சனை குறையும்
இதன் மூலம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் பிரச்சினை குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் வழிக் கட்டணங்களை மட்டுமே ஏற்கும் விதிமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஜனவரி இறுதி வரையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இது மீண்டும் பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டது. எனினும் இந்த முறை கால அவகாசம் நீட்டிப்பு இருக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இருமடங்கு கட்டணம்
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் சிஸ்டம் கட்டாயம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மீறினால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் அட்டைகளை பெறும் வகையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகே பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நல்ல விஷயம் தான்
இதே பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. தற்போது 75-80 சதவிகித கட்டணங்கள், FASTag மின்னணு அட்டைகள் மூலம் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் இது நல்ல விஷயம் தான். இனி டோல்கேட்டில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது..