இந்திய நெடுஞ்சாலை முழுவதும் FASTag பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் FASTag மூலம் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
FASTag பயன்பாட்டுக்கு வந்த பின்பு பெரும்பாலான சுங்க சாவடிகளில் காத்திருப்புக் காலம் குறைந்தாலும், வார இறுதி நாட்களில் அதிகப்படியான டிராபிக் காரணமாகக் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
ஒரு பக்கம் FASTag மூலம் சுங்க கட்டணத்தை வேகமாகச் செலுத்த முடிந்தாலும், மறுபக்கம் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் தொடர்ந்து புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் வசூல் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
FASTag
FASTag மூலம் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் 2022 ஆம் ஆண்டில் 46 சதவீதம் அதிகரித்து 50,855 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் NHAI தெரிவித்துள்ளது.
சுங்கச் சாவடி
2021 ஆம் ஆண்டில் மத்திய மற்றும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் FASTag மூலம் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் வெறும் 34,778 கோடி ரூபாய் மட்டுமே. இந்த ஆண்டு தடாலடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை
டிசம்பர் 2022 இல் தேசிய நெடுஞ்சாலையில் டோல் பிளாசாக்களில் FASTag மூலம் தினமும் சராசரியான 134.44 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டன. டிசம்பர் 24, 2022 அன்று ஒரு நாள் அதிகபட்ச வசூல் அளவு 144.19 கோடி ரூபாயைத் தொட்டதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரிவர்த்தனை எண்ணிக்கை
இதேபோல், FASTag பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் முந்தைய வருடத்தைக் காட்டிலும் சுமார் 48 சதவீத வளர்ச்சியைக் கண்டு உள்ளது. FASTag பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2021 ஆண்டில் 219 கோடியாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 324 கோடியாக அதிகரித்துள்ளது.
6.4 கோடி FASTag
இன்று வரை இந்தியாவில் சுமார் 6.4 கோடி FASTag -கள் வெளியிடப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதேபோல் இந்தியா முழுவதும் FASTag மூலம் இயக்கப்படும் டோல் பிளாசாக்களின் எண்ணிக்கையும் 2022 இல் 1,181 ஆக அதிகரித்துள்ளது. இதில் 323 மாநில நெடுஞ்சாலை கட்டண பிளாசாக்களும் அடக்கம். இது 2021 ஆம் ஆண்டில் 922 ஆக இருந்தது.
பிப்ரவரி 16 அறிவிப்பு
பிப்ரவரி 16, 2021 முதல் அனைத்து தனியார் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் மத்திய அரசு FASTag வாயிலாக மட்டுமே டோல் பிளாசாவில் கட்டணத்தைச் செலுத்தும் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. இதேவேளையில் இந்தியாவில் வர்த்தகமும் 2022 ஆம் ஆண்டில் மேம்பட்ட காரணத்தால் அதிக வசூல் பதிவாகியுள்ளது.