இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளும், அதன் பயன்பாடும் மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில், கொரோனா வந்து அதன் வளர்ச்சிக்கு தடைபோட்டது. இந்த இடைவெளியை டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் பல நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தகத்தைத் துவங்கவும், சேவைகளை விரிவாக்கம் செய்யவும் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த வகையில் இந்த இடைவெளியை பேஸ்புக் நிறுவனமும் பெரிய அளவில் பயன்படுத்திப் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப்
உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்-ன் கிளை நிறுவனமான வாட்ஸ்அப் இந்தியாவில் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ள நிலையில், இதன் வாடிக்கையாளர் பலத்தை முழுமையாக பயன்படுத்திப் புதிய வர்த்தகத்தை அடைய வேண்டுமெனத் திட்டமிட்ட வாட்ஸ்அப் நிதியியல் பிரிவைக் குறிவைத்து புதிய சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய சேவைகள்
வாட்ஸ்அப் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காகக் கடன், மைக்ரோ இன்சூரன்ஸ், மைக்ரோ பென்ஷன் திட்டங்களைப் பெறுவதற்கான தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக, வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவைகளை வாட்ஸ்அப் குளோபல் பின்டெக் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முக்கிய வங்கிகள்
வாட்ஸ்அப்-ன் இந்தப் புதிய நிதியியல் சேவைகளை அறிமுகம் செய்ய ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாகவும் அபிஜித் போஸ் தெரிவித்தார்.
தற்போது இத்திட்டங்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட அளவிலான வார்த்தகமும் வருவாயும் இருந்தால் கூட வாட்ஸ்அப் பெரிய அளவில் முதலீடு செய்து விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அபிஜித் கூறியுள்ளார்.
பேடிஎம், போன்பே, அமேசான்
இந்தியாவில் தற்போது பேடிஎம், போன்பே, அமேசான் ஆகிய நிறுவனங்கள் தற்போது நிதியியல் சேவைகளை அளித்து வரும் நிலையில், இந்த லாக்டவுன் காலத்தில் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதியியல் சேவைகளை விரிவாக்கம் செய்யப் பல்வேறு முதலீடுகளையும் கூட்டணியையும் உருவாக்கியது.
போட்டி
இந்த 3 நிறுவனங்களின் ஆதிக்கத்தை எளிதாக வாட்ஸ்அப் தகர்த்துவிட முடியும், காரணம் வாட்ஸ்அப் இந்தியாவில் வைத்திருக்கும் 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் தான்.
வெறும் 10 சதவீதம் பேர் வாட்ஸ்அப்-ன் புதிய நிதியியல் சேவையைப் பயன்படுத்தினால் கூட 4 கோடி வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ்அப் பெற்றுவிட முடியும்.
இதனால் வாட்ஸ்அப்-இன் நிதியியல் சேவை அறிமுகம் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்த உள்ளது.