இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியா ஸ்தம்பித்து போயுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்மை என பல காரணங்களினால் மக்கள் அல்லாடி வருகின்றனர்.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையிலும் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவெனில், உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
உலகின் பல்வேறு நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், தனி நபர்களும் , என் ஜி ஓ-க்களும் உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
இந்தியாவுக்கு உதவி
குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மாஸ்டர் கார்டு, ஃபெட்எக்ஸ், ஹாலிவுட் பிரபலங்கள் என பலரும் உதவி செய்வதாக உறுதியளித்து வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் என விமான நிலையங்களில் வந்து இறங்கிக் கொண்டுள்ளன.
அமெரிக்க NGOக்கள் உதவி
குறிப்பாக அமெரிக்காவின் பல NGOs மற்றும் தனி நபர்கள் இணைந்து, 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளன. இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மசோதாக்கள், இந்தியாவில் உள்ள NGOsகளுக்கு நன்கொடை வழங்குவதை கட்டுப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எப்படி இது சாத்தியமா? உண்மை என்ன வாருங்கள் பார்க்கலாம்.
என்ஜிஓக்கள் பாதிப்பு
இந்த திருத்தமானது ஏற்கனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின், நிதி ஆதாரத்தினை ஒரே இரவில் அகற்றியது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக கொரோனாவும் வந்துள்ளது. இது உள்ளூர் தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பதை குறைக்க, சர்வதேச என்.ஜி.ஓக்களை தூண்டியுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது சுகாதாரம், கல்வி கூட பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்
அதெல்லாம் சரி அதென்ன சட்டம்? இதனால் யாருக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1976ம் ஆண்டு வரப்பட்ட சட்டங்களில் ஒன்று தான் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டம். இந்த சட்டத்தில் தான் கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர் இது மிகவும் கடுமையான சட்டமாகவும் மாறியுள்ளது.
முறைப்படுத்துவதற்கான சட்டம்
அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்களுக்கு வரும் நன்கொடைகளை முறைப்படுத்துவதற்காக கொண்டு வருவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் திருத்தம் கொண்டு வரப்பட்ட பின்னர், இது சிறிது நம்பிக்கையில்லா தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அப்போதே இத்துறை சார்ந்த வட்டாரத்தில் கூறப்பட்டது. இதனால் என்ஜிஓ-க்களுக்கு கிடைக்கும் நிதி குறையலாம் என கூறப்பட்டது.
மறைமுகமான முட்டுக்கட்டைகள்
ஏனெனில் இந்த திருத்தம் காரணமாக இந்தியாவுக்கு நன்கொடை அளிக்க மற்ற நாட்டு நிறுவனங்கள் யோசிக்கின்றன. அரசு இதனை மத மாற்றத்தினை தடுக்கவும், தீவிரவாதத்தினை கட்டுப்படுத்துன் நோக்கில் இதில் திருத்தம் கொண்டு வந்ததாக கூறியது. ஆனால் இன்று பாதிக்கப்படுவது இன்று இந்திய மக்கள் தான். ஏனெனில் இதில் பல மறைமுகமான முட்டுக்கட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக வெளிநாட்டு என் ஜி ஓ-க்களிடம் இருந்து நேரடியாக மற்றொரு அமைப்புக்கு நிதி வழங்குவதை தடை செய்கின்றது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறுசிறு என் ஜி ஓ-க்களும் பாதிக்கப்படும்.
செலவு வரம்பு
அதோடு இந்த சட்டத்தில் என் ஜி ஓ-க்கல் நிர்வாக செலவுகளுக்கு 20% வரம்பு விதிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த என் ஜி ஓ-க்கள் சமூகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல செலவுகள் உள்ளன. இந்த செலவுகள் நிர்வாகம் அல்லாத பிரிவில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்
அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள என் ஜி ஓக்கள் இந்தியாவுக்கு உதவி செய்ய நினைத்தாலும், அதனை இங்கு கொண்டு வருவதில் சிரமம் நீடிக்கிறது. இது நிதி உதவிகளை குறைக்கலாம். அப்படி இல்லையேல் நேரிடையாக அரசாங்கத்திற்கு சென்று சேரலாம். இதனால் இந்தி இந்திய என் ஜி ஓக்களுக்கு போதிய நிதி கிடைக்காமல் போவது முற்றிலும் உண்மையே.