கொரோனா தொற்றில் இருந்து இந்தியா இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்றாலும் பல துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீட்டை செய்தனர்.
ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
அன்னிய முதலீடு
2021-22 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் சுமார் 83.57 பில்லியன் டாலர் அளவிலான FDI (வெளிநாட்டு நேரடி முதலீடு) முதலீடுகளை இந்தியா பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் அன்னிய முதலீட்டின் அளவு 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறை
உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு விருப்பமான நாடாக இந்தியா இருந்தது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் வாய்ப்பை பெற்று இருந்த காரணத்தால் ஒரே வருடத்தில் அதிகப்படியாக 83.57 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு குவிந்துள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை
இந்திய உற்பத்தி துறையில் அன்னிய முதலீடுகளின் அளவு 2020-21 ஆம் நிதியாண்டில் 12.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 76 சதவீதம் அதிகரித்து 21.34 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.
சிங்கப்பூர்
இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் மொத்த முதலீட்டில் 27 சதவீத தொகையுடன் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து 18 சதவீத அளவீடு உடன் அமெரிக்கா, 16 சதவீதம் தொகை உடன் மொரிஷியஸ் ஆகியவை முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
முக்கியத் துறை
மேலும் அதிக முதலீட்டை பெற்ற துறைகளில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்டுவேர் துறை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சேவை துறை, ஆட்டோமொபைல் துறை ஆகியவை முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
ஏப்ரல் 2022 நிலைமை வேற
இவை அனைத்தும் மார்ச் 31க்கு முன்பு, ஏப்ரல் மாதம் துவங்கிய உடன் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் மூலம் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வருகிறது. ஆர்பிஐ தரவுகள் படி மார்ச் 2022ல் 3446.01 மில்லியன் டாலர் வெளியேறிய நிலையில், ஏப்ரல் மாதம் 6714.89 மில்லியன் டாலர் வெளியேறியது.


Click it and Unblock the Notifications