அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் கூட பிரதமர் மோடி, இந்தியா தான் உலகிலேயே முதலீடு செய்ய தோதான நாடு எனவும் வலியுறுத்தியது நினைவு இருக்கலாம்.
சரி, இப்போது அதிரடி என்று சொல்லும் அளவிற்கு அப்படி என்ன பெரிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார்கள். வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
அதற்கு முன் இந்தியாவில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்ய என்ன மாதிரியான சட்ட சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது எனவும் பார்த்துவிடுவோம்.
சிக்கல்கள்
பொதுவாகவே ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு அனுமதி அளிப்பது தொடங்கி இந்தியாவின் நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி, செபி அமைப்பு என பல அமைப்புகளிடம் இருந்து, பல அனுமதி வாங்க வேண்டி இருக்கும். இந்த சிக்கல்கள் ஒவ்வொரு வகையான முதலீட்டுக்கும் மாறுபடும்.
பிரச்சனை சுருக்கம்
இந்தியாவைச் சேர்ந்த ஜாயின்ட் வெஞ்சர் நிறுவனங்கள் (Joint Venture Company) மற்றும் இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் (Wholly Subsidiary Company) வெளிநாட்டில் இருந்து கொண்டு, இந்தியாவில் முதலீடு செய்வது தற்போதைய விதிமுறைகள் படி சிரமமான காரியம். எனவே இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் ஜாயின்ட் வென்சர் நிறுவனங்கள் எதுவும் வெளி நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது.
ஏன் முடியாது
வெளிநாடுகளில் இருக்கும், இந்திய நிறுவனங்களின் ஜாயின்ட் வென்சரஸ் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் , மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி வாங்க வேண்டும். அதோடு இந்திய நிறுவனங்கள் தன்னுடைய ஜாயின்ட் வென்ச்சர் மற்றும் துணை நிறுவனங்கள் வழியாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் முதலீடுகளாக இந்தியாவில் கொண்டு வரவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டி இருக்கிறது. இதை ரவுண்ட் ட்ரிப்பின் என்பார்கள். இந்த ரவுண்ட் ட்ரிப்பிங்கை இந்திய நிறுவனங்கள் செய்யவில்லை என நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அப்படி நிரூபிப்பதும் அத்தனை எளிதான காரியமில்லை.
இதெல்லாம் உதாரணம் தான்
இப்போது மேலே சொன்னவைகள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் ஜாயிண்ட் வென்சர் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் சட்ட சிக்கல்களில் ஒரு சின்ன சாம்பிள் தான். இது போல பல நுணுக்கமான பிரச்சனைகள் சட்ட ரீதியாக சரி செய்யப்பட வேண்டி இருக்கிறது. அதை தான் தற்போது அரசு கையில் எடுத்து இருக்கிறது.
அரசு தரப்பு
இப்படி இந்தியாவின் ஜாயின்ட் வெஞ்சர் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இருந்து, இந்தியாவுக்கு முதலீடுகளை கொண்டு வர மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல், இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் சட்டங்களை திருத்த இருக்கிறார்களாம். இந்த சட்டத் திருத்தங்கள் எல்லாமே விரைவில் அமலுக்கு வரும் என்றும் சொல்லி இருக்கிறது அரசு தரப்பு.
இப்போது ஏன்
உலக பொருளாதார மந்தநிலை, அமெரிக்க சீன வர்த்தக போர், இந்திய பொருளாதாரத்தில் நிலவும் தேக்கம், இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் நுகர்வு சரிவு போன்ற சவால்களை எதிர் கொள்ள... இந்த மாற்றங்களை கொண்டு வர இருக்கிறார்களாம். இதனால் கணிசமான முதலீடுகள் இந்தியாவில் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது அரசு தரப்பு. இதற்கு முன் இந்தியாவின் ஜாயின்ட் வென்சர் நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் உண்மையாகவே முதலீடு செய்ய வந்தாலும், கடுமையான சட்ட திட்டங்களால் வேறு நாடுகளுக்கும் முதலீடு சென்றுவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
உயர்மட்ட கமிட்டி
பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா தலைமையில் ஒரு உயர்மட்ட கமிட்டி இயங்கியது. இந்த கமிட்டி இந்தியாவின் ஏற்றுமதியை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து விவாதித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. அந்த ஆலோசனை அறிக்கையில் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான சட்ட திட்டங்கள் பெரிய அளவில் திருத்தப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவில், முதலீடு அதிகரித்து, வியாபாரம் செழிக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக இந்திய பொருளாதார சூழல் மற்றும் சுர்ஜித் பல்லா தலைமையிலான கமிட்டி அறிக்கையை வைத்து தான், இப்போது அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விதிகளையும் சட்டங்களையும் தளர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.