உலகம் முழுக்க பல நாடுகள் கொரோனாவின் தாக்கத்தினால் பெருத்த அடி வாங்கி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் சுயரூபத்தினை காட்டி வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 70 சதவீதம் ஸ்டார்டப்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து FICCI சர்வே அறிக்கையின் படி, 17 சதவீதம் ஸ்டார்டப்கள் மூடப்பட்டுள்ளனவாம்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க்குடன் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்டப்கள் தங்களது வழக்கமான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
கொரோனாவின் தாக்கத்தினால் பெருத்த அடி
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஸ்டார்டப்கள் பெருத்த அடி வாங்கியுள்ளதாக பிக்கியின் செயலாளர் திலீப் செனாய் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து வரும் மாதங்களில் முதலீடுகளும் சற்று குறைவாகவே காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் குறைவான மூலதனம் மற்றும் பணப்புழக்கம் குறைவாக உள்ளதையடுத்து, இது அடுத்து வரும் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்களில் அதிக பணி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
செலவுகள் குறைப்பு
இந்த சர்வேயின் மூலம் 68 சதவீத ஸ்டார்டப்கள், செயல்பாட்டு மற்றும் நிர்வாக செலவுகளைக் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் 22 சதவீதம் பேர் அடுத்த 3 - 6 மாதங்களுக்கு நிலையான செலவுகளை சமாளிக்க கையில் பண இருப்பு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம் இருக்கலாம்
எனினும் மூலதனம் இன்மையால் அது பணி நீக்கம் என்னும் நிலைக்கு தள்ளப்படலாம். அதிலும் தற்போதுள்ள நிலையில் மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்வார்கள் என்றும் 30 சதவீதம் ஸ்டார்டப்கள் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, பதிலளித்தவர்களில் 43% பேர் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 20 - 40% வரம்பில் சம்பளங்களைக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதலீடுகள் குறைந்து விட்டன
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் இந்திய ஸ்டார்டப்களில், முதலீடுகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் ஸ்டார்டப்களின் செயல்பாடுகளில் ஒரு முக்கிய பங்கினை வகிக்க வேண்டும். ஏனெனில் ஸ்டார்டப்களில் முதலீடுகள் வெகுவாக குறைந்து விட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது.
முதலீடுகளும் குறையும்
இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 33 சதவீதம் பேர் முதலீட்டாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர். இதே 10 சதவீத ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் நிதிபிரச்சனை என்பது தொடரும் என்றும், இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 92% பேர் அடுத்த ஆறு மாதங்களூக்கு தொடர்ந்து முதலீடுகளும் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.