சர்வதேச அளவிலான சுற்றுலா மற்றும் பயண நிறுவனமான காக்ஸ் அண்ட் கிங்ஸ் குழுமத்தின் மீது, ஹெச்டிஎஃப்சி வங்கியில் வாங்கிய 50.71 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மோசடி குறித்து வழக்கு போடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில் மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, ஹெச் டி எஃப் சி வங்கியில் 50.71 கோடி ரூபாய் மோசடி செய்து கடன் பெற்றுள்ளதற்காக, காக்ஸ் அன்ட் கிங்ஸ் குழுமத்திற்கு எதிராக ஐந்தாவது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உறுதி செய்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. மேலும் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர் பீட்டர் கெர்கரை அமலாக்க இயக்குநகரத்தின் காவல் முடிந்த பின்னர், மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவால் விசாரிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
யார் புகார் செய்தது?
ஹெச்டிஎஃப்சி வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி நிதி ரஜித் மாட்லூப் குரேஷியின் புகாரின் பேரில், இந்த எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதன்மை விசாரணையை
மேற்கொண்ட பின்னர், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
காக்ஸ் அன்ட் கிங்ஸ் மீது வழக்கு
மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, பிரிவு 406, 409, 420, 465, 467, 468, 471 மற்றும் 120 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பயண நிறுவனத்தின் விளம்பரதார்கள், இயக்குனர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனியார் வங்கியில் ஒன்றாக சதி செய்து கடன் பெற்றுள்ளதாக EOW அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மோசடிகள் செய்து கடன்
மேலும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம், சமர்பித்த ஆவணங்கள் போலியானவை. மற்றும் கற்பனையானவை. அவைகள் மோசடியாக கடன் பெறும் நோக்கத்தில் சமர்பிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பீட்டர் கெர்கர் ஏற்கனவே இது போன்ற 4 வழக்குகளை EOWவால் எதிர்கொண்டவர் என்பது தான்.
பல வங்கிகள் புகார்
தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி, இந்தஸ்இந்த் வங்கி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் என நான்கு நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன. இந்த புகார்களின் படி நடந்த முறைகேடுகளின் மதிப்பு சுமார் 1900 கோடி ரூபாயாகும். அதோடு இந்த புகார்கள் மூலம் கிரிமினல், மோசடி, சதி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த லிஸ்டில் தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கியும் சேர்ந்துள்ளது.
யெஸ் வங்கியிலும் மோசடி மூலம் கடன்
இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில், அமலாக்க இயக்குநரகம் காக்ஸ் மற்றும் கிங்ஸின் புரமோட்டர்கள் மற்றும் இயக்குநர்களின் வளாகத்தில் தேடல்களை மேற்கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்கள், இயக்குநர்கள், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் 3,642 கோடி ரூபாயை யெஸ் வங்கியில் இருந்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி வழக்கில் பீட்டர் கெர்கரை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.