இந்தியா பொருளாதாரம் கணிப்புகளை விடவும் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல முன்னணி பொருளாதார அமைப்புகளும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து மிகவும் சாதகமான கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதன் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
9 நாட்கள் முதலீடுகள்
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நவம்பர் மாதத்தைப் போலேவே அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் இக்காலகட்டத்தில் முதலீடு அளவு சுமார் 2.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
நவம்பர் மாதம் மட்டும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 9.55 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்து அசத்தினர், இதில் பெரும் பகுதி முதலீடுகள் பங்குச்சந்தையில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
2020ல் மட்டும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் 18.92 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளனர்.
டிசம்பர் மாத வளர்ச்சி
டிசம்பர் மாதத்தின் முதல் 9 நாட்களில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கிட்டதட்ட 4.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் நவம்பர் மாதத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 11.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள்
மார்ச் மாத சரிவிற்குப் பின் இந்தியப் பங்குச்சந்தை சுமார் 75 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதேபோல் 2020 துவக்க காலகட்டத்தை ஒப்பிட்டால் இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தற்போது 12 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிவிப்புக்குப் பின்பு பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வேகமாக வளரும் நாடுகளில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதன் படி வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
நோமுரா கணிப்பு
நோமுரா அமைப்பின் கணிப்பின் படி 2021ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.9 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதேநேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா 2021ல் 9 சதவீதமாகவும், சிங்கப்பூர் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா, ஆசியாவிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.