கடந்த சில வாரங்களாக சீன மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் இதுவரை 1770 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 70,548 பேருக்கு மேல் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு புறம் இந்த கொடிய வைரஸால் வாடி வதங்கும் மக்கள் ஒருபுறம் எனில், மறுபுறம், இந்தியாவில் கொரோனாவை விட மோசமான மந்த நிலை ஆட்கொண்டுள்ளது.
கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடுத்து விட்டால் அந்த நிலைமை சரியாகி விடும். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் ஏற்கனவே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளோம்.
ஏற்றுமதி முடக்கம்
இப்படி ஒரு பலமான வீழ்ச்சிக்கு மத்தியில் தற்போது தான், இந்திய பொருளாதாரம் துளிர் விடத் தொடங்கியது. இந்த நிலையில் சீனாவின் கொரோனாவால் ஏற்றுமதி கிட்டதட்ட பாதிக்கும் மேல் முடங்கியுள்ளது என்றே கூறலாம். மேலும் சரியான உதிரி பாகங்கள் கிடைக்காமை, மூலதனம் கிடைக்காமையால் ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் முடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு
எனினும் இந்த மோசமான வாய்ப்பையும் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சீனாவினை நம்பால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சீனாவில் அதிகளவு இறக்குமதி செய்து வரும் நாடுகளுக்கு, இந்தியா இறக்குமதி செய்யலாம். மேலும் சீனாவில் முடங்கி போயிருக்கும் நிறுவனங்களின் மற்ற பகுதிகளில் தங்களது உற்பத்தியை தொடங்க நினைக்கின்றன. இதற்கும் இந்தியா கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குவதாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
நிதியமைச்சக கூட்டம்
ஆக இப்படி நிலையில் நாளை நிதியமைச்சகம் கொரோனாவினால் நாட்டின் வர்த்தகம் அல்லது மேக் இன் இந்தியா திட்டத்தில் என்ன இடையூறுகள் இருக்கிறது.இதுவரை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பிடுவதற்காக நிதியமைச்சக ஒரு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியா சீனாவின் முன்னணி வர்த்தக பங்காளிகளில் முக்கியமான ஒருவராக இருக்கும் நாடாகும்.
இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு
மேலும் சீனாவோடு மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது. ஆக சீனாவின் இந்த மோசமான நிலை ஒரு புறம் வருத்தத்தை கொடுத்தாலும், மறுபுறம் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னரே தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்திருந்ததார்.
என்ன சலுகை
ஆக இப்படி ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் இந்தியா இருக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கும் மத்தியில், இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும், உள் நாட்டு உற்பத்தியை பெருக்கும் வகையிலும் சிறப்பானதொரு அறிக்கைகள் அல்லது இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.