இந்தியாவின் முன்னணி பேஷன் ஆக்ஸசரிஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் கடந்த 16 வருடத்தில் முதல் முறையாகக் காலாண்டு முடிவில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதுவும் வரலாறு காணாத அளவிற்கு 172 சதவீத சரிவு.
வாட்ச், மூக்கு கண்ணாடி மற்றும் நகைகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வரும் டைட்டன் நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கொரோனா தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பெரிய சரிவு இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தையும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் இந்த 16 வருட சரிவு பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டைட்டன் நஷ்டம்
ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் லாப உயர்வைச் சந்தித்து வந்த டைட்டன், இந்தியாவில் கொரோனா உச்சத்தை அடைந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தையும் அழித்துள்ளது.
மார்ச் 30 உடன் முடிந்த காலாண்டில் 21 சதவீத வளர்ச்சியில் 356.79 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது டைட்டன். ஆனால் தற்போது வர்த்தகம் லாப அளவீடு 172 சதவீதம் குறைந்து 270 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.
வர்த்தகம்
இக்காலகட்டத்தில் டைட்டன் நிறுவனத்தின் வாட்ச் வர்த்தகம் 90 சதவீதமும், நகை வர்த்தகம் 56 சதவீதமும், மூக்கு கண்ணாடி வர்த்தகம் 80 சதவீதமும் சரிந்துள்ளது. இதனால் டைட்டன் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் சுமார் 74 சதவீதம் சரிந்து கடந்த வருடத்தை விடவும் சுமார் 1,251 கோடி ரூபாய் குறைவான வருவாயைப் பதிவு செய்துள்ளது.
மறுசீரமைப்பு
இந்தக் கொரோனா காலத்தில் வர்த்தகம் பெரிய அளவில் பாதித்துள்ளது, எனவே நிறுவனத்தில் அனைத்து மட்டத்திலும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு டைட்டன் நிறுவனத்தின் இருப்பு நிலையை மேம்படுத்தவும், புதிய வளர்ச்சி திட்டத்தை வகுக்க உள்ளோம் என டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.
காரணம்
டைட்டன் நிறுவனத்தின் வாட்ச் மற்றும் நகை விற்பனை சரிவுக்கு மிக முக்கியமான காரணம் இந்த லாக்டவுன் காலத்தில் பல திருமணங்கள், நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டதால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல் இக்காலகட்டத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தால் தங்க நகை வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து வர்த்தகம் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததாக டைட்டன் தெரிவித்துள்ளது.
பங்கு விலை
டைட்டன் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் டைட்டன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.57 சதவீதம் வரையில் சரிந்து 1068.00 ரூபாயாகச் சரிந்துள்ளது.
இந்தச் சரிவினால் முதலீட்டாளர்களும், டைட்டன் நிறுவனமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.