டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு மூன்று தினங்களாக மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது, மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் தான்.
ஆனால் தற்போது இந்த திட்டம் எப்படி நிறைவேற போகிறது? இந்த திட்டத்திற்கு தேவையான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழாமல் இல்லை. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது இருமடங்கு அதிகரிக்கலாம், அதாவது 7.9 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறுகிறது. இதே இந்த அறிக்கை முன்னதாக 3.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு அறிவித்த இந்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டம், இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதத்தில் 10 சதவீதம் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
மேற்கண்ட இந்த 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பில், முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்ட 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பும், இது தவிர பலவேறு நாணய கொள்கை நடவடிக்கைகள் மூலம் 5.6 லட்சம் கோடி ரூபாய் ஊக்கமும், இரண்டாவது கட்டாமாக 5.94 லட்சம் கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் 6.70 லட்சம் கோடி ரூபாய்க்கான தொகுப்பு அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 2.1 சதவீதம் கடன் வாங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அதிக பற்றாக்குறையுடன், நிலையான கடன் வரம்பு பிரச்சனையும் எழுகிறது என்றும் அறிக்கை கூறியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக அரசாங்க கடன், கடந்த 2011ம் நிதியாண்டு முதல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளில் அரசின் கடன் 62 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றனது. அதே நேரம் ரெபோ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரெபொ விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. இதே 2020ம் நிதியாண்டில் 4.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு விதமான கேள்விகள் எழுகின்றன. இந்தியா எவ்வளவு கடனை வைத்துக் கொள்ள முடியும். கொரோனா நெருக்கடியின் காரணமாக ஏற்படக்கூடிய நிதி நெருக்கடியினை தொடர்ந்து வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைவதால் அரசாங்கம் பாதுகாப்பாக அதிக கடன் வாங்க முடியுமா? என்ற கேள்வி தான் எழுகிறது. ஆக எப்படியோ நிதி பற்றாக்குறை என்பது நிச்சயம் அதிகரிக்கத் தானே செய்யும்.